Thursday, November 30, 2006

ஊர் வரும் பாதை தெரியாமல் - உங்கள்
உறவினில் ஒன்று வாடுதம்மா
போர் முரசம் உங்கு கேட்கையில் - இந்த
பாவையின் மனம் தடுமாறுதம்மா (தாயகமே..)


ஆற்றங்கரையின் ஓரத்தில்- ஊஞ்சல்
ஆடி வளர்ந்த ஆலமரம்
மாமன் வீட்டுத் தோட்டத்தில் - அஞ்சி
மறைந்திருக்கும் அணிற்பிள்ளை
அத்தனையையும் இழந்து விட்டோம்-இந்த
அவசர வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டோம்.
தாலாட்டை மறந்து விட்டோம் - ஈழத்
தாய் மடிவாசம் இழந்துட்டோம்
விழிகளில் ஈரம் துடைத்து விட்டு- ஈழ
விடியலுக்காக காத்திருப்போம் (தாயகமே...)




அன்னை மண்ணின் அரவணைப்பில் - அன்பில்
ஆடிமகிழ்ந்த காலம் அது
தென்னம் ஓலைக் கூரையில் -அன்பைத்
தேக்கிவைத்த குடிசை அது.
அத்தனையையும் இழைந்து விட்டோம் - இந்த
அந்நிய வாழ்வுக்குள் இணைந்து விட்டோம்.
தோட்டம் துரவுகளை இழந்து விட்டோம்- எங்கள்
தோழமை உணர்வைத் தொலைத்து விட்டோம்
மனதினில் பாரம் சுமந்து கொண்டு- எங்கள்
மண் விடுதலைக்காக காத்திருப்போம்.
(தாயகமே..)



செந்தமிழீழத் தமிழ்ப் பிள்ளை - இங்கு
சொந்த மொழி பேச மறுக்கின்றாள்
வந்த பாதையின் சுவடு மறந்து - சொகுசாய்
வாழும் தமிழ் மகனும் இருக்கின்றான்.
காலநதி நீரின் ஓட்டத்தில் - எங்கள்
கன்னித் தமிழ் இங்கு செத்திடுமோ?
ஞாலம் நிலைக்கின்ற காலம் வரை -அது
ஞாயிறு போல நிலைத்திடுமோ.
சொந்த மண் தாண்டி வந்து விட்டோம் - என்று
சொந்த மொழி பேச மறப்போமோ?
புலம்பெயர் மண்ணின் புதுமொழியில்
புலம்பிப் பண்பாடு மறப்போமோ?
(தாயகமே...)

Saturday, November 25, 2006

மெல்லத்தமிழ் இனிச் சாகுமா?

நிலைக்குமா தமிழ் இந்நாட்டில்..?
மெல்லத்தமிழ் இனிச் சாகும் - எனச்
சொல்லி வைத்த எம் பாரதியே- கனடாவில்
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
ஆரியரும் பின் வந்த அந்நியரும்
அடிமைப்படுத்த முடியாத எம் மொழியை- கனடா
காளையரும் கன்னியரும்
கழுத்தறுக்கும் நிலை பாரம்மா..
நுனி நாக்கு ஆங்கிலமும்- வாயில்
நுழையாத பிரெஞ்சும்- இங்கு
தனியாட்சி நடாத்துதம்மா- நம்
தமிழ் இங்கு சாகுதம்மா
மெல்லத்தமிழ் இனிச்சாகும்.......
பாரதியும் பின்வந்த பாரதிதாசனும்
கம்பனும் கண்ணதாசனும்
பாடிய எம் தமிழ்- இன்று
வீடிழந்து போகலாமா?
ஆயிரம் அறிவுமதிகளும்
அண்ணன் காசியானந்தனும்
போற்றும் எம் தாய்மொழி- இங்கு
போக்கற்றுப் போகலாமா?
புரட்சிக் கவி புதுவையும்
புலித்தலைவன் பிரபாவும்
சொத்தெனப் போற்றும் என் தாய்மொழி- இன்று
செத்து விழலாமா?
ஓ! தமிழ்க் குடிமகனே - இங்கு
தமிழ் நிலையைப் பாரடா - உன்
தனித் தமிழ் முயற்சியால்- இத்
தலைவிதியை மாற்றடா
ஆக்கமிகு வேலைத்திட்டம்
ஆயிரம் நீ தீட்டடா
பூக்கும் தனித்தமிழீழத்தில்- அதன்
புகழை நிலை நாட்டடா
பாட்டுக்கொரு தலைவன்
பாரதி போல் வாழடா- நீ
போற்றும் பெண் தமிழைப்
பொன் போல பாரடா
வாட்டமுறும் போது- திரு
வள்ளுவனைப் பாரடா- வாழ்க்கையில்
ஓட்டம் பல கண்டாலும்- தமிழில்
நாட்டம் நீ காட்டடா

Saturday, September 23, 2006

பல்கலைக்கழகங்களும் பண்பாட்டுச் சீரழிவும்.

கனடா வாழ் தமிழர்களிடையே பல்கலைக்கழகக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி பெறவேண்டியதன் தேவையை உணர்ந்துள்ளனர். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பெற்றோரிடையே ஒரு மயக்கமான கருத்து நிலவுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள். கனடா நாட்டிலே சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட துறைகளுக்குப் பெயர்போனவை. அவ்வாறான பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வேறு இடங்களுக்குப் படிக்கப் போகும் போது வரவேற்பும் வேலைவாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கின்றன. அதனால் பெற்றோர் அவ்வாறான சிறந்த பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகள் கல்விபயில வேண்டும் என்ற பேரவாக் கொண்டு அவர்களை அந்தப் பல்கலைக்கழகங்களிற்குப் படிக்க அனுப்புகின்றனர்.
பெரும்பாலான தமிழர்கள் கார்பரோ நகரிலும் மிசிசாகா, மார்க்கம் போன்ற நகர்களிலும் குடியிருப்பதால் அவர்களுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது பெற்றோர்களைப் பிரிந்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீடுகளில் மற்ற நண்பர்களோடு குடியிருக்கும் இவர்களை வழிநடத்தவோ பண்படுத்தவோ பெற்றோரோ பெரியோரோ இல்லாத சூழ்நிலையில் இவர்கள் வாழ்கிறார்கள். பல்கலைக்கழத்திற்குப் போன தன்பிள்ளை என்ன செய்கிறான் என்று கவனிக்கப் பெற்றோரும் அக்கறைப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் வழி மாறித் தடம் மாறி பண்பற்றுப் போகின்ற ஒரு துன்பியல்நிலை உருவாகி வருகின்றது.
பல்கலைக்கழகங்களிற்கு வெளியே வீடுகளில் நண்பர்களோடு தங்கும் இந்த மாணவர்களை வெள்ளி இரவுகளில் இரவு விடுதிகளில் குடிபோதையில் காணமுடிகிறது. ஆண்- பெண் உறவின் தூய்மை இவர்களுத் தெரிவதில்லை. திருமணம் என்ற சடங்கின் முக்கியத்துவமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடோ இவர்களுக்கு அறவே இல்லை. மனம் போனபோக்கில் வாழ்ந்து விட்டுப் போவது தான் இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வாறு வெளியே தங்கும் மாணவர்கள் எல்லோருமே வழி மாறிப் போகின்றார்கள் என்று குற்றம் சாட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் வழி மாறிப் போகின்றவர்கள் விழுக்காடு அதிகரித்துப் போகின்றது என்ற திடுக்கிடும் உண்மையை உணரவைப்பதே இக்கட்டுரையின் எண்ணப்பாடு.
வெள்ளையரின் பண்பாட்டில் திளைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் மேன்மையைப் புரியவைப்பது என்பது இங்கு குழப்பமான விடயம். ஆண், பெண் எனத் தனித்தனியே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆண்களிருக்கும் வீட்டுக்குப் பெண்கள் போவதும் பெண்ணிருக்கும் வீட்டுக்கு ஆண் போய்த் தங்கிவிட்டு வருவதும் மிகச்சாதாரணமாக நடக்கின்றது. இரவு விடுதிகளுக்குப் போகும் ஆண்களும் பெண்களும் குடிப்பதும் கட்டியணைத்து நடனமாடுவதும் பண்பாட்டின் தலைசிறந்த கூறுகள் என்று இவர்கள் நினனத்துக் கொள்கின்றார்கள். அவ்வாறு நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மாணவர்களை கோழைகள் என்றும் ஆண்மையற்றவர் என்றும் இவர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடவிரும்பாத மாணவர்களும் தாங்கள் செய்வது தவறோ என்று எண்ணத் தலைப்படுகின்றார்கள்.
தமிழர்கள் நடத்தும் கேளிக்கை இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெள்ளையர் போல் உடையணிவதும் தலைக்கு சாயம் பூசிக் கொள்வதும் ஒயில் என நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு இவர்களில் செலவழிக்கும் பணமோ மிக மிக அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகளில் குடிபோதைக்கும் அடிதடிகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. கேளிக்கை என்ற பெயரில் கேவலங்களை தெரிவு செய்வது ஏனோ என எண்ணத்தோன்றுகிறது. கனடா மண்ணில் பிறந்து வளரும் முதல் புலம்பெயர் தமிழ் மாணவர் தலைமுறை இனிவரும் தலைமுறைக்குப் பண்பாடு என்ற பெயரில் விட்டுச் செல்லப் போவது குப்பைகளையா? நீங்களே சிந்தியுங்கள்.

Friday, September 08, 2006

கள்ளுண்ணாமை

தமிழர் பண்பாடுகளுள் ஒன்றாகத் திருவள்ளுவரால் பேசப்பட்டிருக்கும் பொருள் கள்ளுண்ணாமையாகும். இசுலாமிய மதம் போன்ற வேறு சில மதங்களிலும் மது அருந்துதல் மதத்திற்கெதிரான குற்றமாகக் கருதப்பட்டு வருகிறது.

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டாதார்.

என்று திருக்குறள் சொல்கிறது. அதாவது அறிவை மறைத்து மயக்கத்தை உண்டு செய்யும் கள்ளை அறிவுடையோர் உண்ணமாட்டார்கள். சான்றோரால் மதிக்கப்படுவதை விரும்பாதோர் கள்ளை உண்பார்கள்.கள் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அதனால் சான்றோரால் வெறுத்து ஒதுக்கப் படுகிறது.

அறிவியல் உலகிலும் கள் தவிர்க்கபடவேண்டிய ஒன்றே எனச் சான்றுகள் கூறுகின்றன.குடிப்பழக்கம் தொடரும் போது காலப் போக்கில் ஆடவர்கள் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. தொடக்கத்தில் சிறியளவில் குடிக்கத்தொடங்கும் இவர்கள் காலப்போக்கில் பெருங்குடிகாரர்களாக உருவாக்கம் பெறுகிறார்கள். பின்னர் ஒரு காலத்தில் தன் தவற்றை உணர்ந்து திருந்தி மதுவைத் தவிர்க்க நினைக்கும் போது அவர்களால் அது முடியாமல் போகிறது. காலங்காலமாக மது மயக்கத்தின் பிடியில் இருப்போரால் அதை விடுத்து சாதாரணமாக இயங்க முடிவதில்லை. மது என்ற அரக்கனின் கோரப் பிடியிலிருந்து வெளிவருவதற்கு இவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டி இருக்கிறது. முழுமையான மனக்கட்டுப்பாடும் பொறுமையும் இல்லாதவர்கள் மருத்துவ உதவி கிடைத்தாலும் இதிலிருந்து மீண்டுவர முடியாது திண்டாடுவர்.

இவ்வாறு உடல் நலத்திற்கும் பண்பாட்டிற்கும் தீது விளைவிக்கும் கள்ளை ஏன் ஆண்கள் விரும்பி அருந்துகின்றார்கள்? குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழும் ஆண்கள் சிறுவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். கல்லூரி வாழ்க்கையும் நண்பர்களும் இவர்களுக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப் படுத்துகின்றன. தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் மேற்குலகின் பண்பாட்டுத் தாக்கத்தில் அறிமுகமான குடிப்பழக்கத்தைத் தவறல்ல என்று சொல்வது கேலிக்கிடமானது. இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் (Table Manners) மேசைப் பண்பாடு. தமிழர் அல்லாத மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடுவதற்கும் அந்த சமூகத்தோடு ஒட்டி உறவாடுவதற்கும் இந்த மது விருந்துபசாரம் பெரிதும் உதவுவதாக இவர்கள் கதை விடுவார்கள். ஆனால் உண்மை நிலையை உற்றுநோக்கினால் வேற்றினத்தைச் சேர்ந்த மக்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்களைத் தவிர்த்தோ அல்லது குடிக்குமாறு வற்புறுத்தியோ நடந்து கொள்வதில்லை. ஒருவர் குடிக்க விரும்பவில்லையானால் கிண்டல் செய்யாமல் அவருடைய உணர்வை மதித்து அவர்கள் நடந்து கொள்வதைப் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. மற்றவர் தன்னை தன் குடிப்பழக்கத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கூறப்படும் பொய்ச்சாக்கு இதுவாகும்.
அடுத்தாக இவர்கள் முன்வைக்கும் காரணம் குடிக்கும் ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு ஆண் குடிப்பழக்கம் அற்றவனாக இருக்கும் போது அவனைக் கோழை அல்லது ஆண்மையற்றவன் எனப் பெண்கள் கருதுவார்கள் என ஒரு சில ஆண்கள் சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். புலம்பெயர்வாழ் நாடுகளில் பிறந்து வளரும் பெண்களிடையே இது போன்ற ஒரு கருத்து இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவரின் கவனத்தைத் திசை திருப்ப இது போன்ற விரும்பாத செயலைச் செய்வது கோழைத்தனம் அல்லவா? இது குறித்து திருவள்ளுவர் கூறியிருப்பதை உற்று நோக்குவோம்.

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும்
கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

அதாவது கள் என்று சொல்லப்படுகிற குற்றத்தை உடையவனை "நாண்" என்னும் உயர் பண்பைக் கொண்ட பெண் காண அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள். நல்லொழுக்கம் கொண்ட பெண் குடிப்பழக்கம் உடைய ஆணைக் கண்டு அஞ்சி ஒதுங்குவாள். ஆக, நல்லொழுக்கம் கொண்ட எந்த ஒரு பெண்ணும் குடிக்கும் ஆடவரை விரும்பமாட்டார்கள். ஆகவே, பெண்களுக்குப் பிடிப்பதனால் தான் குடிக்கின்றோம் என்ற வாதமும் இங்கு தவிடு பொடியாகிப் போகிறது.

அடுத்து வள்ளுவர் கூறும் குறள் மிக முக்கியமான ஒன்று.

கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறியாமை கொளல்.

அதாவது, தன்கைப் பொருள்(பணம்) கொடுத்து உடலை நிலைகுலையைச் செய்யும் அறியாமையைக் கொள்பவன் தன் பழவினையைப் பயனை தனக்குக் காரணமாய் உடையதாகும், ஆதாவது முற்பிறப்பில் தான் செய்த பாவங்களை தனக்குரியதாக்கி அதனைச் சுமப்பதற்கு ஒப்பானதாகும்.இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த குடிபோதைக்காக இந்த இளைஞர்கள் கொடுக்கும் விலை அதிகமாகும். உடல் நலத்திற்கு தீங்கான விடத்தை ஒத்த மதுவை அதிக விலை கொடுத்து உண்பவனை முட்டாள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது
?

Sunday, August 20, 2006

பணம் கொடுத்து பண்பாட்டை விற்கும் தமிழ்க் கனடியர்.

கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மத்தியில் அண்மைக் காலமாகப் புதுவிதமான ஒரு பண்பாடு துரித கதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. திருமண சடங்குகளில் slide show எனப்படும் ஒளிப்படத்தொகுப்பு திருமணங்களுக்கு வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டப் படுகிறது. இந்த ஒளிப்படத் தொகுப்புகளில் இவர்கள் மணமகனையும் மணமகளையும் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் மற்றும் Scarborough Centre போன்ற பொது இடங்களிலும் ஓடவிட்டும் ஆடவிட்டும் ஒளிப்படங்களாக்குகின்றார்கள். திரைப்படங்களில் வரும் பாடற்காட்சிகளில் வரும் நடிகனும் நடிகையும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு தழுவிக்கொள்வது போல் மணமகனையும் மணமகளையும் செய்யுமாறு சொல்லி அதை ஒளிபடமாக்கி அதனைத் திருமண வீடுகளில் திரையிடுகிறார்கள். இதில் வரும் மணமகனும் மணமகளும் வேறு வேறு இடங்களில் மேற்கத்து மற்றும் பண்பாட்டு உடைகளில் வருகிறார்கள். திருமணத்திற்கு வரும் உறவினருக்கு இதனைக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் மணமக்களை திருமணத்திற்கு முன்னரே இது போல் கட்டியணைத்து முத்தமிட்டு திருமணத்திற்குப் பின் நான்கு சுவற்றுக்குள் நடக்கவேண்டியவற்றையெல்லாம் படம் பிடித்து திரையிட்டுக் காட்டுகிறார்கள். இவ்வாறான ஒளிப்படங்களைப் பிடிப்பதற்கு இவர்கள் கொடுக்கும் விலை கனடியப் பணமதிப்பில் $ 3,000.
ஒளிப்படம் பிடிப்பவர்களின் வியாபார நோக்கத்திற்குப் பலியாவது கனடா வாழ் இளைய தலைமுறையினர். கனடியப் பண்பாட்டி ஊறி வளரும் அவர்களுக்கு இது போல் மற்றவர் முன்னர் அணைப்பதோ முத்தமிடுவதோ பெரியவிடயம் அல்ல. இது அவர்களுக்கு மிகச் சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால் அந்த மணமக்களுடைய பெற்றோர் இதை வரவேற்பதும் ஆதரிப்பதும் சற்று வியப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. இந்தப் பெற்றோருடைய காலத்தில் இவர்கள் எடுக்கும் திருமணப்படங்களில் இவர்கள் தத்தமது வாழ்க்கைத்துணைக்கு நெருக்கமாக நின்றிருக்கமாட்டார்கள். மணமகளை அந்த ஆண் எந்தப்புகைப்படத்திலும் தொட்டபடி நிற்கமாட்டான். ஆனால் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் ஒருவர் தோள் மீது ஒருவர் கைவைத்தும் ஒருவர் கையை மற்றவர் பற்றியவாறும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருந்தபோதும் மணமக்களுக்கு இது போன்ற படங்களை எடுக்கும் போது ஒருவிதமான தயக்கமும் கூச்சமும் இருக்கும்.
இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவென்றால் இது போன்ற ஒளிப்படங்களை எடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கனடாவில் பிறந்தவர்கள் அல்லர். இவர்கள் 10 முதல் 12 வயதிற்குள் கனடாவிற்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழ்த் திரைப்படங்களின் மீதிருக்கும் அதீத மோகமும் பாடற்காட்சிகளின் மீது இருக்கும் அளப்பரிய கவர்ச்சியுமே இவர்களை இது போன்ற புகைப்படங்களை எடுக்கத்தூண்டுகின்றன. தமிழர் பண்பாடும், ஆண்- பெண் உறவை வெளிச்சமிட்டுக் காட்டக்கூடாது என்ற எண்ணமும் இவர்களுக்கு இருப்பதில்லை.
திருமணத்திற்கு முன்னர் மணமக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதோ நெருங்கிப் பழகுவதோ காதலிக்கும் போது நெருக்கமாக இருப்பதோ பண்பாட்டின் படி தவறாகும். ஆணும் பெண்ணும் கருத்தொருமித்துப் பழகுவதும் மனதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதும் தவறல்ல. ஆனால் திருமணம் என்றொரு பாலம் இருவரிடையேயும் ஏற்பட்டு சட்டப்படியும் உறவினர் முன்னிலையிலும் கணவன் மனைவி என்ற அங்கீகாரம் கிடைக்கும் வரை தொடுதலை தவிர்க்கலாம். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆண் பெண் உறவு திருமணத்திற்கு முன்னர் இருப்பது மிகச் சாதாரண விடயம் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும், உறவினர் முன்னிலையிலும் திருமணத்திற்கு வரும் தமிழரல்லாத வேற்றினமக்கள் மத்தியிலும் இது போன்ற கேவலமான ஒளிப்படத் தொகுப்புகளைப் போட்டு தமிழர் பண்பாடு இது தான் என்ற எண்ணத்தை வளரும் தமிழ் சமூகத்தின் மத்தியிலும் மற்றைய இனத்தவரிடமும் விதைக்காதீர்கள். பணத்தைச் செலவு செய்து பண்பாட்டை விற்காதீர்கள்.

Wednesday, August 09, 2006

மண் வாசனை

வெளியே நிலாக்காய்ந்து கொண்டிருந்தது. முற்றத்துத் தென்னை மரக்கீற்றிடைவெளிகளில் நிலவொளி புகுந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் பாய்விரித்துப் படுத்திருந்த கனகம் மெல்லப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மெல்லிய கூதலோடு கூடிய தென்றல் அவள் உடலை வருடிக் கொண்டிருந்தாலும் உள்ளே மனம் கொதித்துக் கொண்டிருப்பது அவளின் அனல் போன்ற பெருமூச்சில் புலப்பட்டது. " வன்னிக்கு மாடு சாய்க்கவென்று போன மனுசன். போய் இன்றோடு இரண்டு கிழமையாகப் போகுது. அப்படி என்னதான் செய்யுதோ தெரியவில்லை. வீட்டில் மனிசி பிள்ளையள் தனிய இருக்குங்கள் எண்ட நினைப்பிருந்தால் இப்பிடி இருப்பரே ". உள்ளே மகள் கண்மணி விழித்தெழுந்து சிணுங்கிக் கொண்டிருப்பது தெரிந்து திடீரென்று விழித்துக் கொண்டாள். " கனகம், மோள் எழும்பி அழுகிறாள் போல இருக்குப் பிள்ளை. ஒருக்கா வந்து பாரன் " திண்ணையில் படுத்திருந்த மாமியார் குரல் கொடுத்தார். மெல்லிய தூங்கக் கலக்கத்தோடும் எரிச்சலோடும் வாயிற்கதவை திறந்து உள்ளே போய் பார்த்தாள். நிலைப்படிக்கருகில் இருந்த தூணில் தொங்கிக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கை மெல்லத் தூண்டி விட்டு வீட்டிற்குள் ஒளிபாய்ச்சினாள். கூடத்து மண் தரையில் மகள் கண்மணி சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. "என்ன பிள்ளை, ஏன் சுருண்டு படுத்திருக்கிறாய்? என்ன மோனை செய்யுது?" "அம்மா, என்னண்டு தெரியல்லையணை. காத்தால இருந்து ஒரே வயிற்றுக் குத்து. இப்ப கொஞ்சம் கடுமையா இருக்கு. குத்து தாங்கமுடியாமல் இருக்கணை. ஏதாவது மருந்து, கிருந்து இருந்தால் தாணை" " கொஞ்சம் பொறு பிள்ளை. கசாயம் வைச்சுத் தாறன். காத்தால விடிஞ்சதும் பரியாரி வீட்டுக்குப் போய் மருந்தெடுப்பம்." அடுக்களையில் நுழைந்து முந்தநாள் பெய்தமழையில் நனைந்து ஊறிப் போயிருந்த விறகை தணலில் கொஞ்ச போட்டுவைத்தாள். அடுக்களைத் தட்டிலிருந்த தகரப்பேணிகளில் சுக்கைத் தேடிக் கண்டுபிடித்து கொத்தமல்லி போட்டுக் காசாயம் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு. இந்த நேரத்தில் ஒத்தாசைக்குப் பக்கத்தில் இல்லாமல் வன்னிக்கு மாடு சாய்க்கப் போன மனுசன் கந்தப்பு மீது கோபம் கோபமாக வந்தது. " ஊரில் யாருக்கு மாடு வேணுமென்றாலும் இந்தா நான் போய் வாங்கி வாறன் என்று போகவேண்டியது. இங்க குடும்பம் குட்டியள் தனிய இருக்குங்கள் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கவேண்டியது. இந்த இராத்திரி நேரத்தில் பிள்ளை ஏலாமல் படுத்திருக்கிறாள். திடீரென்று உடம்பிற்கு முடியாமல் போய் பரியாரி வீட்டுக்குப் போவதென்றால் இவளால் வண்டி கட்டிக் கொண்டு போகமுடியுமோ இந்த நேரத்தில. மனிசி, பிள்ளையளின்ர நினைப்பு கொஞ்சமாவது இருந்தால் இப்படி போய் கிழமைக்கணக்கில வராமல் இருக்குமெ இந்த ஆள்." கோபத்தோடு முணுமுணுத்தபடி கயிற்றுக் கட்டிலில் வந்து படுத்தவள் எப்படியோ தூங்கிப் போனாள். வீதியில் மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுத்திடுக்கிட்டு எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. தோட்டத்தில் வேலை தேங்கிப் போய்க் கிடக்கு. வெயிலேற முந்தி மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். அப்படியே வெங்காயப்பூ முறிக்கவேண்டும். அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளைப் பிடுங்கி எறியவேண்டும். இப்ப விட்டால் பிறகு வெறும் புதர்க்காடு தான் மிஞ்சும். கடைசியில் வெங்காயத்தைத் தேடித்தான் பிடிக்கவேணும். அவசர அவசரமாக எழுந்து கிணற்றடியில் போய் முகத்தை அலம்பி கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கொண்டை போட்டாள். உள்ளே வந்து தேநீர் போடுவதற்காக அடுப்பை ஊதி மூட்டிவிட்டு கூடத்திலிருந்த தூண்டாமணி விளக்கைக் கொஞ்சம் தூண்டி விட்டாள். திண்ணையில் படுத்திருந்த மாமனார் சத்தம் கேட்டு விழித்து, " என்ன பிள்ளை விடிஞ்சிட்டுதெ? " குரல் கொடுத்தாள். " ஓம் மாமா. தோட்டத்தில கனவேலை கிடக்கு இன்றைக்கு. மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். துலா மிதிக்க ஆள் இல்லை. நீங்கள் தான் வரவேணும்.மகனைத் தண்ணி மாறவிடலாம். பள்ளிக்கூடம் தொடங்கிறதுக்கு முந்தி முழுக்க இறைச்சு முடிச்சமென்றால் தம்பி பள்ளிக்கூடம் போகலாம். பிள்ளை வயிற்றுக்குத்து என்று ஏலாமல் படுத்திருக்கிறாள். அவளைப் பரியாரி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். இறைச்சுப் போட்டு வந்து வெளிக்கிடுவம். "என்றாள்.

Tuesday, August 01, 2006

அந்திவானும் ஆழ்கடலும்
அணைத்துக் கொள்ளும்
இளமாலைப் பொழுதில் நீங்கள்
தீட்டிய கவிதைகள்
கானல் நீரில் கை நனைக்கும்
கனவுகள் அல்ல.
தூரத்து வானைத்
தொட்டுவிடத் துடிக்கும்
துடிப்புள்ள இளைஞரின்
கை சேர்ந்த கவிதைகள்.
இது கவிச்சாரல்
கலங்கரை தேடும் இளம்
கவிஞர்களுக்கெல்லாம்
களம் அமைத்துக் கொடுக்கும்
தளம் இது.