அந்த அதிகாலை கும்மிருட்டு வேளையில் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் தொடருந்தில் நான் உட்கார்ந்திருந்தேன். சாளத்தில் இருந்து வரும் மெல்லிய குளிர் தென்றலில் மனம் மயங்கிப் போய்க்கிடந்தது. எதிர் இருக்கைகளில் என் தம்பியும் இரண்டு தங்கைகளும் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் என் அருகில் இருந்த அம்மாவைப் பார்த்தேன். அவருக்கும் இலேசான தூக்கக்கலக்கம் இருந்தது. அன்று எங்களுக்கு கொழும்பில் மருத்துவப்பரிசோதனை இருந்தது. கனடா நாட்டுத் தூதரகத்திலிருந்து மருத்துவச் சோதனை அறிக்கை கேட்டிருந்தார்கள். என் தம்பிக்கு 14 வயதாகியிருந்தது. தங்கைகளில் ஒருத்திக்கு 11 வயதும் மற்றவளுக்கு 4 வயதும் ஆகியிருந்தது. அம்மா தன் கைப்பையில் கனடாத் தூதரகத்தில் இருந்து வந்த விண்ணப்பங்களை ஒரு கோப்பில் வைத்திருந்தார்.
வண்டி சிலாபம் நகர்ப்பகுதியை அடைந்தது மெல்ல ஒளிபரவத் தொடங்கியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த என் குட்டித் தங்கை எழுந்து உட்கார்ந்திருந்து சாளரத்தின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு சிங்களப் பெண்மணி வந்து உட்கார்ந்தார். என் அம்மாவின் வயதை ஒத்த அந்தப் பெண்மணி வேலைக்குப் போகும் பெண்மணி என்று பார்வையிலேயே புரிந்தது. எங்களுக்கு அடுத்த பெட்டியில் ஐந்தாறு சிங்கள ஆண்கள் உட்கார்ந்திருந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். என் சின்னத்தங்கை பக்கத்தில் இருந்த சிங்களப் பெண்மணியிடம் மழலை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணிக்கு எதுவும் புரியவில்லை. தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தார். தன் கையில் இருந்த ஏதோ ஒரு தின்பண்டத்தைத் தங்கைக்கு ஊட்டினார்.
வண்டி கொழும்பை நெருங்க நெருங்க எங்களை உற்சாகம் தொற்றிக்கொண்டது. இதோ இன்னும் 1 மணி நேரத்தில் கொழும்பை அடைந்து விடும். மருத்துவச் சோதனை முடித்து நாங்கள் கனடா போய் அப்பாவோடு சேர்ந்துவிடலாம் என்ற எண்ணமே எங்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அப்பா வெளிநாட்டுக்குப் போனதிலிருந்து பாவம் அம்மா தான் எல்லாவேலையும் செய்யவேண்டியிருந்தது. எங்கள் நான்கு பேரையும் வளர்ப்பது, கனடா தூதுரகத்திற்குச் சென்று விண்ணப்பம் கொடுப்பது, படுக்கையில் இருக்கும் அப்பம்மாவைக் கவனிப்பது என அம்மாவுக்கு எந்த நேரமும் வேலைகள் இருந்தபடியே இருக்கும். அப்பா இங்கிருந்திருந்தால் வெளிவேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்திருப்பார். அம்மாவுக்கு சிங்களமொழி பேசத்தெரியாது. பேசினாலும் புரியாது. சிலாபத்தில் நாங்கள் வாழ்ந்த ஊரிலிருந்து எங்கேயாவது வெளியே போனால் 1 வாரத்திற்குள் திரும்பவேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களை ஒவ்வொரு புதனும் நாங்கள் வாழும் ஊர்களிலிருக்கும் காவல்நிலையங்களில் கையெழுத்துப் போடச்சொல்லியிருந்தார்கள். அதனால் நாங்கள் கொழும்புக்குப் போனாலும் புதன்கிழமைக்கு முன் ஊருக்குத் திரும்பவேண்டியிருக்கும். கொழும்பிலும் சொந்தக்காரர் வீட்டில் தங்குவதாக இருந்தால் காவல்நிலையத்திற்குச் சென்று பதிவு செய்யவேண்டும். மொழி தெரியாத ஊரில் ஒற்றை ஆளாக நின்று அம்மா மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கும். இன்று மருத்துவச்சோதனை முடிந்தால் விரைவில் எங்களுக்கு விசா கொடுத்து விடுவார்கள். நாங்கள் அப்பாவிடம் போய் விடலாம். அப்பாவும் அந்தக் குளிர்நிறைந்த தேசத்தில் தனியாக சிரமப்படவேண்டியிருக்காது என்ற நினைப்பே இனிமையாக இருந்தது. என் தங்கைகள் இருவருக்கும் கனடாவுக்குப் போகப் போகின்றோம் என்பதைவிட விமானத்தில் போகப் போகின்றோம் என்ற புளகாங்கிதமே அதிகமாக இருந்தது.
நான் சாளரத்தின் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். தொடருந்து நீர்கொழும்பைத் தாண்டியிருந்தது. அடுத்த பெட்டியிலிருந்து 4 கழுத்துப்பட்டி அணிந்திருந்த ஆண்கள் எங்கள் பெட்டியை நோக்கி வருவது தெரிந்தது. பெட்டியிலிருந்த அத்தனைபேரையும் புறந்தள்ளி விட்டு அவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள். அம்மாவை நோக்கி உன் பெயர் என்ன என்று அதட்டும் குரலில் அவர்கள் கேட்டார்கள். அம்மாவுக்கு அவர்கள் கேட்டது புரியவில்லை. திகைத்துப் போய்ப்பார்த்தார். பின்னர் தன்பெயரைச் சொன்னார். எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகின்றாய்? என்றெல்லாம் அவர்கள் கேள்விகேட்கத்தொடங்கினார்கள். நான் அம்மாவின் கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டேன். இப்போது அவர்களின் பார்வை என்மீது பாய்ந்தது. அம்மா கனடா நாட்டுத்தூதரகத்திற்குப் போகிறோம் என்று தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன ஆதாரம்? நீ புலிதானே என்று அம்மாவை அவர்கள் மிரட்ட நான் கைப்பையைத் திறந்து கனடா நாட்டுத் தூதரகத்தில் எங்களுக்குக் கொடுத்திருந்த விண்ணப்ப படிவங்களைக் காட்டினேன். எங்கள் அடையாள அட்டைகளைப் பார்த்த அவர்கள் சொந்த ஊர் யாழ்ப்பாணம் என்றதும் அதிகமாக மிரட்டத்தொடங்கினார்கள். நான் எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சிங்களப் பெண்மணியை கலங்கிய கண்களோடு பார்த்தேன். அவரின் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. அந்த நால்வரும் எங்கள் துணிப்பைகளிலிருந்து துணிகளை வெளியே எடுத்துக் கொட்டினார்கள். அதற்கு வெடிகுண்டைத் தேடினார்கள். எங்கள் இருக்கைகளைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் எங்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. குட்டித் தங்கை பயத்தோடு அம்மாவின் மடியில் சுருண்டு உட்கார்ந்திருந்தாள். அந்த நால்வரும் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் எண்ணினோம். சந்தேகத்தின் அடிப்படையில் எங்களைக் கைது செய்து சிறையில் போடப்போகின்றார்களோ என்று அஞ்சினேன். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு அவர்களின் விசாரணையும் சோதனையும் தொடர்ந்தது. கனடா நாட்டுத்தூதரகம் அனுப்பியிருந்த விண்ணப்பபடிவங்கள் பலரின் கைமாறிக் கசங்கிக் கொண்டிருந்தன. அதன்பின்னர் அவர்களுக்கு என்ன தோன்றியதோ எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போனார்கள். போகும் போது பேருக்காவது வருத்தம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எதுவும் சொல்லவில்லை.
அம்மா கசங்கிப் போயிருந்த விண்ணப்ப படிவங்களை அடுக்கிக் கோப்பில் போட்டுக்கொண்டிருந்தார். நானும் தம்பியும் வெளியே கொட்டப்பட்டிருந்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தோம். துணிகளை அடுக்கிவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து சாளரத்தினூடாக வெளியே பார்த்தேன். எங்களைச் சோதித்த அந்த 4 பேரும் சத்தமான குரலில் தங்கள் பணியிடத்து நகைச்சுவைகளைச் சிரிக்கச் சிரிக்கப் பேசிச்சிரித்தபடி வெளியே புகைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஆக, அந்த நால்வரும் எங்களைப் போன்ற சாதாரண பயணிகளா? சாதாரண பொதுமகனுக்கு இன்னொரு பொதுமகனின் உடைமைகளைச் சோதிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? சக பயணி துன்பத்திலிருக்கும் போது கைகொடுக்க இந்தச் சிங்களப் பெண்மணி கூட முன்வரவில்லையே ஏன்? இப்போது என் மனத்தில் பல ஏன்கள் முளைத்தது. என் முன்னால் இருக்கும் அந்தச் சிங்களப்பெண்மணியை நேராக உற்றுப் பார்த்தேன். " பயங்கரவாதிகள் குண்டு வைக்கின்றார்கள். அதனால் தான் பாதுகாப்புக்காக சோதித்தார்கள் " என்றார் அந்த அம்மா. எனக்கு இப்போது சிரிப்பு வந்தது. "அடப்பாவிகளா, குண்டு வைக்க வந்த தீவிரவாதி தன் 4 வயது குழந்தை உட்பட நான்கு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு குண்டுவைக்கவருவானா?" என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. என் குட்டித்தங்கை அம்மாவைப் பார்த்து " தீவிரவாதி என்றால் என்ன அம்மா? " என்று மழலைமொழியில் கேட்டுக் கொண்டிருந்தாள்.
Saturday, June 06, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
கொடுமை.
இந்த சம்பவம் நடந்த அந்த நாட்களை பற்றிய நினைவுகளை படித்துவிட்டோம் இனி நடக்கின்ற நடைப்பெறப்போகின்ற இதை போன்ற சம்பவங்களை தடுத்திட நாம் என்ன செய்ய போகின்றோம்? என்ற கேள்விகளோடு...
இந்திய மண்ணிலிருந்து வெட்கி தலைகுனிந்து நிற்கும் தமிழனாய்....!
Post a Comment