மண் வாசனை
வெளியே நிலாக்காய்ந்து கொண்டிருந்தது. முற்றத்துத் தென்னை மரக்கீற்றிடைவெளிகளில் நிலவொளி புகுந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் பாய்விரித்துப் படுத்திருந்த கனகம் மெல்லப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மெல்லிய கூதலோடு கூடிய தென்றல் அவள் உடலை வருடிக் கொண்டிருந்தாலும் உள்ளே மனம் கொதித்துக் கொண்டிருப்பது அவளின் அனல் போன்ற பெருமூச்சில் புலப்பட்டது. " வன்னிக்கு மாடு சாய்க்கவென்று போன மனுசன். போய் இன்றோடு இரண்டு கிழமையாகப் போகுது. அப்படி என்னதான் செய்யுதோ தெரியவில்லை. வீட்டில் மனிசி பிள்ளையள் தனிய இருக்குங்கள் எண்ட நினைப்பிருந்தால் இப்பிடி இருப்பரே ". உள்ளே மகள் கண்மணி விழித்தெழுந்து சிணுங்கிக் கொண்டிருப்பது தெரிந்து திடீரென்று விழித்துக் கொண்டாள். " கனகம், மோள் எழும்பி அழுகிறாள் போல இருக்குப் பிள்ளை. ஒருக்கா வந்து பாரன் " திண்ணையில் படுத்திருந்த மாமியார் குரல் கொடுத்தார். மெல்லிய தூங்கக் கலக்கத்தோடும் எரிச்சலோடும் வாயிற்கதவை திறந்து உள்ளே போய் பார்த்தாள். நிலைப்படிக்கருகில் இருந்த தூணில் தொங்கிக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கை மெல்லத் தூண்டி விட்டு வீட்டிற்குள் ஒளிபாய்ச்சினாள். கூடத்து மண் தரையில் மகள் கண்மணி சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. "என்ன பிள்ளை, ஏன் சுருண்டு படுத்திருக்கிறாய்? என்ன மோனை செய்யுது?" "அம்மா, என்னண்டு தெரியல்லையணை. காத்தால இருந்து ஒரே வயிற்றுக் குத்து. இப்ப கொஞ்சம் கடுமையா இருக்கு. குத்து தாங்கமுடியாமல் இருக்கணை. ஏதாவது மருந்து, கிருந்து இருந்தால் தாணை" " கொஞ்சம் பொறு பிள்ளை. கசாயம் வைச்சுத் தாறன். காத்தால விடிஞ்சதும் பரியாரி வீட்டுக்குப் போய் மருந்தெடுப்பம்." அடுக்களையில் நுழைந்து முந்தநாள் பெய்தமழையில் நனைந்து ஊறிப் போயிருந்த விறகை தணலில் கொஞ்ச போட்டுவைத்தாள். அடுக்களைத் தட்டிலிருந்த தகரப்பேணிகளில் சுக்கைத் தேடிக் கண்டுபிடித்து கொத்தமல்லி போட்டுக் காசாயம் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு. இந்த நேரத்தில் ஒத்தாசைக்குப் பக்கத்தில் இல்லாமல் வன்னிக்கு மாடு சாய்க்கப் போன மனுசன் கந்தப்பு மீது கோபம் கோபமாக வந்தது. " ஊரில் யாருக்கு மாடு வேணுமென்றாலும் இந்தா நான் போய் வாங்கி வாறன் என்று போகவேண்டியது. இங்க குடும்பம் குட்டியள் தனிய இருக்குங்கள் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கவேண்டியது. இந்த இராத்திரி நேரத்தில் பிள்ளை ஏலாமல் படுத்திருக்கிறாள். திடீரென்று உடம்பிற்கு முடியாமல் போய் பரியாரி வீட்டுக்குப் போவதென்றால் இவளால் வண்டி கட்டிக் கொண்டு போகமுடியுமோ இந்த நேரத்தில. மனிசி, பிள்ளையளின்ர நினைப்பு கொஞ்சமாவது இருந்தால் இப்படி போய் கிழமைக்கணக்கில வராமல் இருக்குமெ இந்த ஆள்." கோபத்தோடு முணுமுணுத்தபடி கயிற்றுக் கட்டிலில் வந்து படுத்தவள் எப்படியோ தூங்கிப் போனாள். வீதியில் மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுத்திடுக்கிட்டு எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. தோட்டத்தில் வேலை தேங்கிப் போய்க் கிடக்கு. வெயிலேற முந்தி மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். அப்படியே வெங்காயப்பூ முறிக்கவேண்டும். அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளைப் பிடுங்கி எறியவேண்டும். இப்ப விட்டால் பிறகு வெறும் புதர்க்காடு தான் மிஞ்சும். கடைசியில் வெங்காயத்தைத் தேடித்தான் பிடிக்கவேணும். அவசர அவசரமாக எழுந்து கிணற்றடியில் போய் முகத்தை அலம்பி கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கொண்டை போட்டாள். உள்ளே வந்து தேநீர் போடுவதற்காக அடுப்பை ஊதி மூட்டிவிட்டு கூடத்திலிருந்த தூண்டாமணி விளக்கைக் கொஞ்சம் தூண்டி விட்டாள். திண்ணையில் படுத்திருந்த மாமனார் சத்தம் கேட்டு விழித்து, " என்ன பிள்ளை விடிஞ்சிட்டுதெ? " குரல் கொடுத்தாள். " ஓம் மாமா. தோட்டத்தில கனவேலை கிடக்கு இன்றைக்கு. மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். துலா மிதிக்க ஆள் இல்லை. நீங்கள் தான் வரவேணும்.மகனைத் தண்ணி மாறவிடலாம். பள்ளிக்கூடம் தொடங்கிறதுக்கு முந்தி முழுக்க இறைச்சு முடிச்சமென்றால் தம்பி பள்ளிக்கூடம் போகலாம். பிள்ளை வயிற்றுக்குத்து என்று ஏலாமல் படுத்திருக்கிறாள். அவளைப் பரியாரி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். இறைச்சுப் போட்டு வந்து வெளிக்கிடுவம். "என்றாள்.

No comments:
Post a Comment