Saturday, September 23, 2006

பல்கலைக்கழகங்களும் பண்பாட்டுச் சீரழிவும்.

கனடா வாழ் தமிழர்களிடையே பல்கலைக்கழகக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி பெறவேண்டியதன் தேவையை உணர்ந்துள்ளனர். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பெற்றோரிடையே ஒரு மயக்கமான கருத்து நிலவுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள். கனடா நாட்டிலே சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட துறைகளுக்குப் பெயர்போனவை. அவ்வாறான பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வேறு இடங்களுக்குப் படிக்கப் போகும் போது வரவேற்பும் வேலைவாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கின்றன. அதனால் பெற்றோர் அவ்வாறான சிறந்த பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகள் கல்விபயில வேண்டும் என்ற பேரவாக் கொண்டு அவர்களை அந்தப் பல்கலைக்கழகங்களிற்குப் படிக்க அனுப்புகின்றனர்.
பெரும்பாலான தமிழர்கள் கார்பரோ நகரிலும் மிசிசாகா, மார்க்கம் போன்ற நகர்களிலும் குடியிருப்பதால் அவர்களுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது பெற்றோர்களைப் பிரிந்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீடுகளில் மற்ற நண்பர்களோடு குடியிருக்கும் இவர்களை வழிநடத்தவோ பண்படுத்தவோ பெற்றோரோ பெரியோரோ இல்லாத சூழ்நிலையில் இவர்கள் வாழ்கிறார்கள். பல்கலைக்கழத்திற்குப் போன தன்பிள்ளை என்ன செய்கிறான் என்று கவனிக்கப் பெற்றோரும் அக்கறைப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் வழி மாறித் தடம் மாறி பண்பற்றுப் போகின்ற ஒரு துன்பியல்நிலை உருவாகி வருகின்றது.
பல்கலைக்கழகங்களிற்கு வெளியே வீடுகளில் நண்பர்களோடு தங்கும் இந்த மாணவர்களை வெள்ளி இரவுகளில் இரவு விடுதிகளில் குடிபோதையில் காணமுடிகிறது. ஆண்- பெண் உறவின் தூய்மை இவர்களுத் தெரிவதில்லை. திருமணம் என்ற சடங்கின் முக்கியத்துவமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடோ இவர்களுக்கு அறவே இல்லை. மனம் போனபோக்கில் வாழ்ந்து விட்டுப் போவது தான் இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வாறு வெளியே தங்கும் மாணவர்கள் எல்லோருமே வழி மாறிப் போகின்றார்கள் என்று குற்றம் சாட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் வழி மாறிப் போகின்றவர்கள் விழுக்காடு அதிகரித்துப் போகின்றது என்ற திடுக்கிடும் உண்மையை உணரவைப்பதே இக்கட்டுரையின் எண்ணப்பாடு.
வெள்ளையரின் பண்பாட்டில் திளைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் மேன்மையைப் புரியவைப்பது என்பது இங்கு குழப்பமான விடயம். ஆண், பெண் எனத் தனித்தனியே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆண்களிருக்கும் வீட்டுக்குப் பெண்கள் போவதும் பெண்ணிருக்கும் வீட்டுக்கு ஆண் போய்த் தங்கிவிட்டு வருவதும் மிகச்சாதாரணமாக நடக்கின்றது. இரவு விடுதிகளுக்குப் போகும் ஆண்களும் பெண்களும் குடிப்பதும் கட்டியணைத்து நடனமாடுவதும் பண்பாட்டின் தலைசிறந்த கூறுகள் என்று இவர்கள் நினனத்துக் கொள்கின்றார்கள். அவ்வாறு நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மாணவர்களை கோழைகள் என்றும் ஆண்மையற்றவர் என்றும் இவர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடவிரும்பாத மாணவர்களும் தாங்கள் செய்வது தவறோ என்று எண்ணத் தலைப்படுகின்றார்கள்.
தமிழர்கள் நடத்தும் கேளிக்கை இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெள்ளையர் போல் உடையணிவதும் தலைக்கு சாயம் பூசிக் கொள்வதும் ஒயில் என நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு இவர்களில் செலவழிக்கும் பணமோ மிக மிக அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகளில் குடிபோதைக்கும் அடிதடிகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. கேளிக்கை என்ற பெயரில் கேவலங்களை தெரிவு செய்வது ஏனோ என எண்ணத்தோன்றுகிறது. கனடா மண்ணில் பிறந்து வளரும் முதல் புலம்பெயர் தமிழ் மாணவர் தலைமுறை இனிவரும் தலைமுறைக்குப் பண்பாடு என்ற பெயரில் விட்டுச் செல்லப் போவது குப்பைகளையா? நீங்களே சிந்தியுங்கள்.

Friday, September 08, 2006

கள்ளுண்ணாமை

தமிழர் பண்பாடுகளுள் ஒன்றாகத் திருவள்ளுவரால் பேசப்பட்டிருக்கும் பொருள் கள்ளுண்ணாமையாகும். இசுலாமிய மதம் போன்ற வேறு சில மதங்களிலும் மது அருந்துதல் மதத்திற்கெதிரான குற்றமாகக் கருதப்பட்டு வருகிறது.

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டாதார்.

என்று திருக்குறள் சொல்கிறது. அதாவது அறிவை மறைத்து மயக்கத்தை உண்டு செய்யும் கள்ளை அறிவுடையோர் உண்ணமாட்டார்கள். சான்றோரால் மதிக்கப்படுவதை விரும்பாதோர் கள்ளை உண்பார்கள்.கள் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அதனால் சான்றோரால் வெறுத்து ஒதுக்கப் படுகிறது.

அறிவியல் உலகிலும் கள் தவிர்க்கபடவேண்டிய ஒன்றே எனச் சான்றுகள் கூறுகின்றன.குடிப்பழக்கம் தொடரும் போது காலப் போக்கில் ஆடவர்கள் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. தொடக்கத்தில் சிறியளவில் குடிக்கத்தொடங்கும் இவர்கள் காலப்போக்கில் பெருங்குடிகாரர்களாக உருவாக்கம் பெறுகிறார்கள். பின்னர் ஒரு காலத்தில் தன் தவற்றை உணர்ந்து திருந்தி மதுவைத் தவிர்க்க நினைக்கும் போது அவர்களால் அது முடியாமல் போகிறது. காலங்காலமாக மது மயக்கத்தின் பிடியில் இருப்போரால் அதை விடுத்து சாதாரணமாக இயங்க முடிவதில்லை. மது என்ற அரக்கனின் கோரப் பிடியிலிருந்து வெளிவருவதற்கு இவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டி இருக்கிறது. முழுமையான மனக்கட்டுப்பாடும் பொறுமையும் இல்லாதவர்கள் மருத்துவ உதவி கிடைத்தாலும் இதிலிருந்து மீண்டுவர முடியாது திண்டாடுவர்.

இவ்வாறு உடல் நலத்திற்கும் பண்பாட்டிற்கும் தீது விளைவிக்கும் கள்ளை ஏன் ஆண்கள் விரும்பி அருந்துகின்றார்கள்? குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழும் ஆண்கள் சிறுவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். கல்லூரி வாழ்க்கையும் நண்பர்களும் இவர்களுக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப் படுத்துகின்றன. தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் மேற்குலகின் பண்பாட்டுத் தாக்கத்தில் அறிமுகமான குடிப்பழக்கத்தைத் தவறல்ல என்று சொல்வது கேலிக்கிடமானது. இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் (Table Manners) மேசைப் பண்பாடு. தமிழர் அல்லாத மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடுவதற்கும் அந்த சமூகத்தோடு ஒட்டி உறவாடுவதற்கும் இந்த மது விருந்துபசாரம் பெரிதும் உதவுவதாக இவர்கள் கதை விடுவார்கள். ஆனால் உண்மை நிலையை உற்றுநோக்கினால் வேற்றினத்தைச் சேர்ந்த மக்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்களைத் தவிர்த்தோ அல்லது குடிக்குமாறு வற்புறுத்தியோ நடந்து கொள்வதில்லை. ஒருவர் குடிக்க விரும்பவில்லையானால் கிண்டல் செய்யாமல் அவருடைய உணர்வை மதித்து அவர்கள் நடந்து கொள்வதைப் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. மற்றவர் தன்னை தன் குடிப்பழக்கத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கூறப்படும் பொய்ச்சாக்கு இதுவாகும்.
அடுத்தாக இவர்கள் முன்வைக்கும் காரணம் குடிக்கும் ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு ஆண் குடிப்பழக்கம் அற்றவனாக இருக்கும் போது அவனைக் கோழை அல்லது ஆண்மையற்றவன் எனப் பெண்கள் கருதுவார்கள் என ஒரு சில ஆண்கள் சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். புலம்பெயர்வாழ் நாடுகளில் பிறந்து வளரும் பெண்களிடையே இது போன்ற ஒரு கருத்து இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவரின் கவனத்தைத் திசை திருப்ப இது போன்ற விரும்பாத செயலைச் செய்வது கோழைத்தனம் அல்லவா? இது குறித்து திருவள்ளுவர் கூறியிருப்பதை உற்று நோக்குவோம்.

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும்
கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

அதாவது கள் என்று சொல்லப்படுகிற குற்றத்தை உடையவனை "நாண்" என்னும் உயர் பண்பைக் கொண்ட பெண் காண அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள். நல்லொழுக்கம் கொண்ட பெண் குடிப்பழக்கம் உடைய ஆணைக் கண்டு அஞ்சி ஒதுங்குவாள். ஆக, நல்லொழுக்கம் கொண்ட எந்த ஒரு பெண்ணும் குடிக்கும் ஆடவரை விரும்பமாட்டார்கள். ஆகவே, பெண்களுக்குப் பிடிப்பதனால் தான் குடிக்கின்றோம் என்ற வாதமும் இங்கு தவிடு பொடியாகிப் போகிறது.

அடுத்து வள்ளுவர் கூறும் குறள் மிக முக்கியமான ஒன்று.

கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறியாமை கொளல்.

அதாவது, தன்கைப் பொருள்(பணம்) கொடுத்து உடலை நிலைகுலையைச் செய்யும் அறியாமையைக் கொள்பவன் தன் பழவினையைப் பயனை தனக்குக் காரணமாய் உடையதாகும், ஆதாவது முற்பிறப்பில் தான் செய்த பாவங்களை தனக்குரியதாக்கி அதனைச் சுமப்பதற்கு ஒப்பானதாகும்.இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த குடிபோதைக்காக இந்த இளைஞர்கள் கொடுக்கும் விலை அதிகமாகும். உடல் நலத்திற்கு தீங்கான விடத்தை ஒத்த மதுவை அதிக விலை கொடுத்து உண்பவனை முட்டாள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது
?