றுவாண்டா நாட்டிலே 1994 காலப்பகுதியில் நடந்தேறிய ருற்சி இனத்தவருக்கு எதிரான குற்று இனத்தவரின் இனவெறியாட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் திரைஓவியம் தான் Sometimes in April. சிறுபான்மை இன ருற்சி இனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் வாழ்க்கைப் போராட்டமும் சந்தித்த இழப்புகளும் இதன் கதைக்களம். சரியான ஓர் ஆவணப்படத்திற்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பெட்டகங்களையும் உள்ளடக்கிய படியே கதை நகர்கிறது. வேறுபாடுகளற்று ஒன்றுபட்டு வாழ்ந்த இரண்டு இனத்தவரிடையேயும் வேறுபாட்டை விதைத்த வரலாற்றுப் பின்னணியைத் தொடக்கத்தில் சொல்ல கதையாசிரியர் தவறவில்லை. இலங்கையைப் போலவே காலானாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்து பின்னர் விடுதலை பெறும் காலப்பகுதியில் பெரும்பான்மை இனத்தவரின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டதும், அதனை எதிர்த்து சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் குதித்ததுமே இந்த இனப்படுகொலையின் பின்னணியாகக் கூறப்படுகிறது.
1994இல் ஒருநாள் றுவாண்டா அரசதலைவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் இனந்தெரியோதோரால் சுடப்பட்ட பின்னரே இந்த வன்முறைகள் வெடித்தன என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே ஒரு பாரிய இனப்படுகொலைக்கு அரசும் அதன் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதைக் கத்தி போன்ற ஆயுதங்களைப் பெரும்பான்மை இனத்தொழிலாளர்களுக்கு வழங்கியும் கொலைக்கான பயிற்சியை இராணுவம் வழங்கியதையும் வைத்துக் கூறலாம். அது போலவே இலங்கை வடகிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர் கையில் ஆயுதங்களை இலங்கை அரசு வழங்கியது. நாட்டில் அசாதாரண நிலை தோன்றத்தொடங்கிய காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் ருற்சி இனத்தைச் சேர்ந்த மனைவி சொல்லும் போது, "இது என் தாய் நாடு. ஏன் நாம் இங்கிருந்து ஓடவேண்டும் " என்று கணவன் சொல்ல, "ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சி உயிருக்குக்குப் பயந்தபடி வாழும் இந்த நாட்டை எப்படி என் தாய்நாடு என்று சொல்வது? " என்று மனைவி கேட்பது நியாயமாகத்தான் படுகிறது. சிறுபான்மை றுற்சி இனத்தவரைக் கரப்பான்பூச்சிகள் என்று சொல்லும் இனவாதவானொலியும் இலங்கையில் ஈழத்தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லும் பெரும்பான்மை இனவாத ஊடகங்களும் ஒன்றை ஒன்று ஒத்த போக்கையே கொண்டிருக்கின்றன.
றுற்சி பெண்ணுக்கும் குற்று ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் "அப்பா, நாங்கள் றுற்சியா குற்றுவா?" என்று கேள்வி எழுப்புவது நெஞ்சைக் கனக்கவைக்கிறது. தோற்றத்தில் வேறுபாடின்றி ஒத்திருக்கும் இரண்டு இனத்தவரை அடையாள அட்டையைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்திப் பார்த்துக் கொலை வெறி நாடகம் அரங்கேறுகிறது. பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் 100 நாட்களில் 1 மில்லியன் றுற்சி இனமக்கள் குற்று இனவாத அரசாலும் மக்களாலும் தேடித்தேடிக் கொலை செய்யப்படுகிறார்கள். அகதிகளாகத் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களில் றுற்சி இனத்தவரைக் கிராமசேவகரின் உதவியுடன் அடையாளங் கண்டு அழித்தொழிக்கின்றது இராணுவ இயந்திரம். பார ஊர்திகளில் இறந்தவர்களின் உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் போது மனிதம் இன்னமும் வாழுகிறதா என்று கேள்வி எழுப்பத்தோன்றுகிறது.
ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் றுவாண்டா இராணுவத்தளபதியைத் தொடர்பு கொண்டு இனப்படுகொலை பற்றிக் கேள்வி எழுப்பிய போது "போராளிகள் எங்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்." என்று படுகொலைகளை மூடிமறைப்பது, இலங்கையில் "பயங்கரவாதிகளைக் கொல்கிறோம்" என்று கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் போக்குக்கு ஒப்பானதாக உள்ளது.
றுவாண்டா நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களை ஐ.நா. படைகள் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது தங்களையும் அந்த வண்டிகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றுமாறு றுற்சி இன மாணவர்கள் கதறுகிறார்கள். சிலர் அந்த வண்டிகளில் பாய்ந்து ஏறி அடைக்கலம் தேடமுயல்கிறார்கள். ஐ.நா. படைகள் வான் நோக்கித் துப்பாக்கி சூடு நடாத்தி அந்த மாணவர்களை வண்டிகளை நெருங்க விடாமல் அச்சுறுத்துகிறார்கள். வெள்ளை இன மாணவர்கள் தப்பினால் போதும் என்ற ஐ.நா.வின் தன்னலப்போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் கண் முன்னால் றுற்சி இனமக்கள் கொல்லப்படும் போது அவர்கள் அமைதியாகக் கண்டும் காணமல் போவது வேதனையைத் தருகிறது. எதிரியின் துப்பாக்கியை விட நண்பர்களின் மௌனமே தங்களை வாட்டியது என்று கதையாசிரியர் சொல்வது கண்கூடு.
பிரெஞ்சுப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் வந்து றுற்சி இனத்தவரைத் தேடியலையும் இராணுவத்திடம் நாங்கள் எல்லோருமே ஒரே மக்கள் என்று துணிச்சலாகக் கூறும் மாணவி துப்பாக்கி முனையால் தாக்கப்படுகிறாள். "இந்தக் பெண்களை உன் குழந்தைகளாக நினைத்துக் கொள். அவர்களை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சும் ஆசிரியை இராணுவத்தால் தாக்கப்படுகிறாள். "என் மகள் கரப்பான்பூச்சி அல்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அத்தனை மாணவிகளையும் இனவேறுபாடின்றிச் சுட்டுத்தள்ளுகிறது இராணுவம்.
திரைப்படம் முடிந்த பின்னரும் நெஞ்சை விட்டு அகலாமல் அந்தக் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இறந்து போன ஒவ்வொரு உயிருக்குமான கண்ணீரைத் தேக்கி இதயம் கனப்பதை மறுக்க முடியவில்லை. எங்கோ ஓர் ஆபிரிக்க கண்டத்தில் நடந்தேறிய இந்த இனப்படுகொலைகளுக்காக ஓர் அமெரிக்கனோ ஆசியனோ கண்ணீர் வடிக்கின்றான் என்றால் அது அந்த திரைப்படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி எனலாம். இது போன்ற எத்தனையோ மனிதப் படுகொலைகள் ஈழமண்ணில் அரங்கேறியும் அது உலகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதற்கு ஈழத்திரைப்படத்துறையின் நலிந்த போக்கே காரணம். அண்மையில் தாயகத்திலிருந்து வெளிவந்த ஆணிவேர் திரைப்படம் ஈழத்தமிழரின் துயர் சொல்லும் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொல்வந்த கருத்து திரைப்படத்தில் முழுமையாக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அது சிறிய ஏமாற்றமே. ஈழத்தமிழர் தவிர்ந்த வேறு எந்த இனமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீச்சையுடையதாக அந்தத் திரைப்படம் அமையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டத்திற்கான வலுவான காரணியும் இனக்கலவரத்திற்கான பின்னணியும் ஆணிவேரில் மேலோட்டமாகவேனும் அலசப்பட்டிருக்கவில்லை. 1983இல் கொழும்பில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்த ஒரு திரைப்படமாவது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. சியாம் செல்வதுரை எழுதிய Funny Boy என்ற புத்தகத்தில் இனக்கலவரம் குறித்த நேரடி அனுபவம் ஆங்கில் மொழியில் பதியப்பட்டிருந்தது. ஆனால் புத்தகம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு.
ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் வன்னிப்பகுதியில் வாழும் ஒரு மருத்துவர் இறந்து போவதாகச் சொல்லப்படுவதும் இறுதிக்காட்சியில் அவர் உயிரோடு வருவதும் நம்பமுடியாத ஒன்று. அதுவரை அவர் எங்கிருந்தார் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாததும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாக இருப்பது கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்க்கவில்லை. பத்திரிகை நிருபராக வரும் மதுமிதா இராணுவக்கட்டுப்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்திற்குச் செல்வதும் அதன் பின்னர் யாழ்ப்பாண இடப்பெயர்வைக் காட்டுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. வன்னியில் தயாரிக்கப் பட்ட உயிர்பூ, செவ்வரத்தம்பூ போன்ற குறும்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட ஆணிவேர் ஏற்படுத்தவில்லை. காட்சியமைப்பும் காட்சிகளின் தரமும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருந்தும் திரைக்கதையின் வலு படத்தின் உயிரோட்டத்திற்குப் போதுமானதாக இருக்கவில்லை.
இந்தக் குறைகளை எல்லாம் களையப்பட்டு, Sometimes in April படத்தில் றுவாண்டா றுற்சி இனமக்களின் அவலம் சொல்லப்பட்டது போல ஈழத்தமிழர் துயர் சொல்லும் ஒரு திரைப்படமாவது வெளிவரவேண்டும். றுற்சி இனப்படுகொலைகள் நடந்தது சித்திரையில். ஈழத்தமிழர் படுகொலை நடந்தேறியது ஆடியில். றுற்சி மக்களுக்கு Sometimes in April என்றால் ஈழத்தமிழருக்கு Sometimes in July. எங்களுக்கான ஒரு திரைப்படம் உலகளவில் வெளிவருமா?
Tuesday, May 01, 2007
Subscribe to:
Posts (Atom)
