Sunday, May 31, 2009

மிட்டாய்

1988ஆம் ஆண்டில் ஒருநாள், என் தங்கை பிறந்து கைக்குழந்தையாக தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள். அத்தனை நாளும் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக குழந்தை பராமரிப்புக்கு நின்ற என் அம்மம்மாவும் தோட்டவேலை அதிகமாக உள்ளது என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். வீட்டில் நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் புதிதாகப் பிறந்த என் தங்கையும் இருந்தோம். தங்கை மரத்தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். எனக்கு என் தங்கையைத் தூக்கி மடியில் வைத்திருக்கவேண்டும் என்ற அவா இருந்தது. ஒவ்வொரு தடவை அம்மாவிடம் கேட்கும் போது நீ சின்னப்பிள்ளை, குழந்தையை சரியாகத் தூக்கமாட்டாய். கொஞ்சம் வளர்ந்ததும் நீ அவளைத்தூக்கலாம் என்று சொல்வார். தங்கை தூங்கும் போது மட்டும் அம்மாவின் கண்காணிப்பில் என் மடியில் வைத்திருப்பேன். அன்றும் அப்படித்தான் தங்கை பால் குடித்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மா தங்கைக்கு ஆக்கினை செய்யாதே. அவள் தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுவேலைகள் செய்து கொண்டிருந்தார். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்கத்தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரும்பு காலணிகளின் ஓசை கேட்கத் தொடங்கியது. இப்போது நாய்கள் வெறிகொண்டவை போல் குரைக்கத் தொடங்கின. நான் வீட்டுச் சாளரத்தினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். சாளரக்கம்பிகளைப் பிடித்தபடி மிரண்டு போன விழிகளோடு நானும் தம்பியும் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். " ஆமி வாறான் போல இருக்கு " என்று சொல்லிவிட்டு அம்மா தன்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். வீட்டில் அந்த நேரத்தில் லைக்கோன் கோழிப்பண்ணை வைத்திருந்தோம். கொல்லைப் பக்கம் எலுமிச்சை காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவுக்கு தன்னுடைய கோழிகள் இந்திய இராணுவத்தின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் அதிகமாக இருந்தது. கோழிகளை உரிமையாளரின் அனுமதியின் அபகரித்துக் கொண்டு போவது இந்திய இராணுவத்தின் வழக்கம். திடீரென்று வாசல் படலையைத் திறந்து கொண்டு 8 பேர் கொண்ட இராணுவக் குழு ஒன்று எங்கள் வளவிற்குள் நுழைவது தெரிந்தது. அப்பா உடனே சுதாரித்துக் கொண்டு " ஆமி வீட்டுக்குள் வரப்போகின்றான். அதற்கு முன் எல்லோரும் வெளியேற வேண்டும் " என்று கத்தினார். அம்மா தூங்கிக் கொண்டிருந்த தங்கையைத் தூங்கினார். அப்பா தம்பியைத் தூக்கினார். வீட்டின் முன் கதவைத் திறந்து கொண்டு எல்லோரும் முற்றத்திற்கு வரும் போது இராணுவம் எங்கள் வீட்டுமுற்றத்திற்கு வரவும் சரியாக இருந்தது. நான் மிரண்ட விழிகளோடு இராணுவத்தைப் பார்த்தேன். யாருடைய முகத்திலும் நட்புணர்வு இருக்கவில்லை. ஆயுதம் தாங்கிய மிருங்களாக அவர்கள் என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். அப்பாவிடம் அரைகுறை ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார்கள். தங்களுக்குள் இந்தி மொழியில் ஏதேதோ பேசினார்கள். திடீரென்று ஒருவன் தன் சப்பாத்துக் காலால் அப்பாவை உதைந்தான். பின்னர் துப்பாக்கி முனையில் அப்பாவை நான்கு பேர் வீட்டின் கொல்லைப்புறம் கொண்டு போனார்கள். அப்பாவுக்குப் பின்னால் அம்மாவும் போகமுயற்சிக்க இன்னொருவன் அம்மாவின் கழுத்தில் துப்பாக்கியை வைத்தான். அப்பா கலங்கிய விழிகளோடு அம்மாவைப் பார்த்து எந்த சூழ்நிலையிலும் வீட்டுக்குள் போகாதே என்று அம்மாவை எச்சரித்து விட்டு இராணுவத்தோடு சேர்ந்து கொல்லைப் புறம் போனார். பிள்ளை நீ கொல்லைப்பக்கம் போ. அப்பாவை என்னவோ செய்யப் போகிறார்கள். போய் அப்பாவோடு நில். நான் இங்கு சமாளிப்பேன் என்று கத்தினார். நான் அப்பாவுக்கு பின்னால் கொல்லைப் புறம் போனபோது நாலைந்து இராணுவ மிருகங்கள் சேர்ந்து அப்பாவைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பா வலியால் துடிப்பது தெரிந்தது. வலியைத் தாங்கியபடி அப்பா பிள்ளை நீ அம்மாவோடு போய் நில். அம்மாவைத் தனியாக விடாதே என்று கத்தினார். நானும் தம்பியும் அம்மாவிடம் ஓடினோம். நாங்கள் முற்றத்தில் அம்மா இருக்குமிடத்திற்கு போனபோது நாலுபேர் அம்மாவை சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். ஒருவன் அம்மாவின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி வீட்டுக்குள் போ என்று மிரட்டிக் கொண்டிருந்தான். அம்மா தங்கையை இறுக்கி அணைத்தபடி நான் வீட்டுக்குள் போகமாட்டேன். ஏன் போகவேண்டும் என்று சத்தமாகக் கேட்டார். உன்னுடைய அறையில் நீ ஆயுதம் வைத்திருக்கின்றாய். அதை சோதிக்கவேண்டும். கதவைத் திற. என்றான் ஒருவன். அம்மா கையிலிருந்த வீட்டுத்திறப்பை வீசினார். போ. போய் நன்றாகச் சோதனை செய். ஆயுதம் இருந்தால் கண்டு பிடி. ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லியபடி முற்றத்தில் உட்கார்ந்தார். ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து சுவரில் தொங்கிய என் மாமாமாரின் படத்தை எடுத்து வந்தான். யாரிது என்று என்று அம்மாவை அவன் கேட்டான். அவர்கள் என் இறந்து போன சகோதர்கள் என்று அம்மா சொன்னார். "எப்படி செத்தது? புலி தானே. இரண்டு புலி " என்று ஆணவச்சிரிப்பு சிரித்தான் ஒருவன். அம்மா உரத்தகுரலில் புலி இல்லை. புலிக்கும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. என்று அம்மா கத்தினார். எங்களுக்கு சந்தேகம் உள்ளது. "உன்னுடைய படுக்கையறையில் ஆயுதம் வைத்திருக்கிறாய். நாங்கள் அதைச் சோதிக்கவேண்டும். போ, போய்க் கதவைத்திற" என்று மிரட்டினான் ஒருவன். அறைத்திறப்பை நான் ஏற்கனவே உனக்குத் தந்துவிட்டேன். சந்தேகம் இருந்தால் நீயே போய்ப் பார். நான் உள்ளே வரமாட்டேன். என்று அம்மா தன் முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் எனக்கு 5 வயது தான் ஆகியிருந்தது. அப்போது அம்மாவின் பிடிவாதத்திற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஏன் அம்மா துப்பாக்கிமுனையிலும் கூட வீட்டுக்குள் போகமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை. அம்மாவின் பிடிவாதம் அந்த மிருகங்களின் திட்டத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் எரிச்சலில் இருந்து புரிந்தது. ஒருவன் துப்பாக்கியை தூக்கி அம்மாவின் நெற்றிப் பொட்டின் மீது வைத்தான். உள்ளே போ, போகாவிட்டால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினான். அம்மா என்னையும் தம்பியையும் அணைத்துக் கொண்டார். சுடுடா, சுடு, சுட்டுக்கொல்லு. என் சகோதரர்களை இலங்கை இராணுவம் கொன்றது. எங்களை நீங்கள் கொல்லுங்கள். குடும்பமாகச் சுட்டுக் கொல்லு. எல்லோரையும் சுடு என்று அம்மா கத்தினார். நானும் தம்பியும் ஓ என்று சத்தமிட்டு அழத்தொடங்கினோம். மடியில் தூங்கிக் கொண்டிருந்த என் தங்கை திடுக்கிட்டு விழித்து அழத்தொடங்கினாள். வீரிட்டு அழத்தொடங்கினாள். அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதும் நாங்கள் அழுவதை நிறுத்தவில்லை. எங்கள் அழுகுரல் கேட்டு அயல்வீட்டிலிருக்கும் சொந்தங்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதைக் கண்ட இராணுவம் கொஞ்சம் மிரண்டது. கொல்லையில் அப்பாவை அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தவர்கள் முற்றத்திற்கு ஓடிவந்தார்கள். பின்னால் அப்பா வலியோடு மெதுவாக நடந்து வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார். வீதியில் போய்க் கொண்டிருந்த ஊர்மக்கள் வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே வரத்தொடங்கினார்கள். நிலைமை கட்டுக் கடங்காமல் போவதை உணர்ந்த இராணுவம் மெல்ல வெளியேற முனைந்தது. வீதியால் போய்க் கொண்டிருந்த அந்த சிப்பாய்களின் தலைவன் செய்தி தெரிந்து எங்கள் வீட்டுக்கு வந்தான். சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர் என்பது அவரின் தலைப்பாகையில் இருந்து தெரிந்தது. நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த அவர் அங்கிருந்த இராணுவ மிருகங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

எனக்கு அழுகை அழுகையாக இருந்தது. அதன் பிறகு வந்த ஒவ்வொரு இரவும் பகலும் அம்மா வீட்டுக்குள் இருப்பதை முடிந்தவரை தவிர்த்தார். ஆண்கள் வேலைக்கு போகும் போது அயல்வீட்டில் இருக்கும் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்கள் பெண்களோடு கூட்டம் கூட்டமாக இருக்கத்தொடங்கினர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் பெரியப்பா என்னை ஒரு விளையாட்டுப் போட்டிக்குக் கூட்டிப்போனார். அங்கே தலைப்பாகை அணிந்த பல இராணுவத்தினர் இருந்தார்கள். குழந்தைகளுக்காக விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்து பெரியப்பாவோடு ஆங்கிலத்தில் பேசினார். எனக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. பெரியப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அவர் என்னைப் பார்த்து " பாப்பா, உன் பேரு என்ன? " என்று கேட்டார். நான் பெயரைச் சொன்னதும். " பாப்பா, என்ன படிக்குது? மிட்டாய் சாப்பிடுறியா? " என்று மிட்டாய்களை எனக்குக் கொடுத்தார். நான் அவரை மிரட்சியோடு பார்த்தேன். பின்னர் பெரியப்பாவின் முகத்தைப் பார்த்தேன். " அவருக்கு நன்றி சொல்லு. மிட்டாயை வாங்கு " என்றார் பெரியப்பா. நான் மிட்டாயை வாங்கினேன். அவருக்கு நன்றி சொன்னேன். பின்னர் நாங்கள் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். மிதிவண்டியில் வரும் போது பெரியப்பாவைப் பார்த்து கேட்டேன் " பெரியப்பா, மிட்டாய் என்றால் என்ன?". பெரியப்பா சொன்னார் " இந்தியாவில் இனிப்பை மிட்டாய் என்று தான் சொல்லுவினம். சாப்பிட்டுப்பார். எப்பிடி இருக்கு?". "இனிக்குது" என்றேன் நான்." பெரியப்பா, அந்த தாடி வைச்ச மாமா யார்? ஏன் அவருக்கு தமிழ் தெரியவில்லை? " என்று கேட்டேன். பெரியப்பா சொன்னார் " அவர் இந்திய இராணுவத் தளபதி. அவர் தான் இந்த இடத்திற்குப் பொறுப்பாளர். சிங்கள இராணுவம் உன்னுடைய மாமாக்களைச் சுட்டுக் கொன்று விட்டது தானே. இனிமேல் வேறு யாரையும் அப்பிடி சுடமாட்டினம். அப்படி சுடவந்தால் இந்த மாமா விடமாட்டார். அவர் எங்களைக் காப்பாத்துவார் " என்றார் பெரியப்பா." ஓ இவர் அப்ப நல்ல மாமாவா? சரி" என்றேன் நான்.

இந்த சம்பவம் நடந்த பிறகு ஒருநாள் பெரியப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா கலங்கிய விழிகளோடு நடந்த சம்பவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஓடி வந்து பெரியப்பாவின் மடியில் உட்கார்ந்தேன். " பெரியப்பா, அந்த தாடி வைச்ச மாமா எங்கட வீட்டுக்கு வந்தவர். அவர் நல்ல மாமாவா பெரியப்பா? "என்று கேட்டேன் நான். பெரியப்பா எந்தப் பதிலும் சொல்லவில்லை." பெரியப்பா, எனக்கு மிட்டாய் பிடிக்கவில்லை " என்றேன் நான். அவர் விரக்தியாக எங்கேயோ பார்த்தார்.

சித்திரையில் சில பொழுதுகளும்(Sometimes in April) ஆணிவேரும்

றுவாண்டா நாட்டிலே 1994 காலப்பகுதியில் நடந்தேறிய ருற்சி இனத்தவருக்கு எதிரான குற்று இனத்தவரின் இனவெறியாட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் திரைஓவியம் தான் Sometimes in April. சிறுபான்மை இன ருற்சி இனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் வாழ்க்கைப் போராட்டமும் சந்தித்த இழப்புகளும் இதன் கதைக்களம். சரியான ஓர் ஆவணப்படத்திற்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பெட்டகங்களையும் உள்ளடக்கிய படியே கதை நகர்கிறது. வேறுபாடுகளற்று ஒன்றுபட்டு வாழ்ந்த இரண்டு இனத்தவரிடையேயும் வேறுபாட்டை விதைத்த வரலாற்றுப் பின்னணியைத் தொடக்கத்தில் சொல்ல கதையாசிரியர் தவறவில்லை. இலங்கையைப் போலவே காலானாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்து பின்னர் விடுதலை பெறும் காலப்பகுதியில் பெரும்பான்மை இனத்தவரின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டதும், அதனை எதிர்த்து சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் குதித்ததுமே இந்த இனப்படுகொலையின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

1994இல் ஒருநாள் றுவாண்டா அரசதலைவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் இனந்தெரியோதோரால் சுடப்பட்ட பின்னரே இந்த வன்முறைகள் வெடித்தன என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே ஒரு பாரிய இனப்படுகொலைக்கு அரசும் அதன் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதைக் கத்தி போன்ற ஆயுதங்களைப் பெரும்பான்மை இனத்தொழிலாளர்களுக்கு வழங்கியும் கொலைக்கான பயிற்சியை இராணுவம் வழங்கியதையும் வைத்துக் கூறலாம். அது போலவே இலங்கை வடகிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர் கையில் ஆயுதங்களை இலங்கை அரசு வழங்கியது. நாட்டில் அசாதாரண நிலை தோன்றத்தொடங்கிய காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் ருற்சி இனத்தைச் சேர்ந்த மனைவி சொல்லும் போது, "இது என் தாய் நாடு. ஏன் நாம் இங்கிருந்து ஓடவேண்டும் " என்று கணவன் சொல்ல, "ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சி உயிருக்குக்குப் பயந்தபடி வாழும் இந்த நாட்டை எப்படி என் தாய்நாடு என்று சொல்வது? " என்று மனைவி கேட்பது நியாயமாகத்தான் படுகிறது. சிறுபான்மை றுற்சி இனத்தவரைக் கரப்பான்பூச்சிகள் என்று சொல்லும் இனவாதவானொலியும் இலங்கையில் ஈழத்தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லும் பெரும்பான்மை இனவாத ஊடகங்களும் ஒன்றை ஒன்று ஒத்த போக்கையே கொண்டிருக்கின்றன.

றுற்சி பெண்ணுக்கும் குற்று ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் "அப்பா, நாங்கள் றுற்சியா குற்றுவா?" என்று கேள்வி எழுப்புவது நெஞ்சைக் கனக்கவைக்கிறது. தோற்றத்தில் வேறுபாடின்றி ஒத்திருக்கும் இரண்டு இனத்தவரை அடையாள அட்டையைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்திப் பார்த்துக் கொலை வெறி நாடகம் அரங்கேறுகிறது. பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் 100 நாட்களில் 1 மில்லியன் றுற்சி இனமக்கள் குற்று இனவாத அரசாலும் மக்களாலும் தேடித்தேடிக் கொலை செய்யப்படுகிறார்கள். அகதிகளாகத் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களில் றுற்சி இனத்தவரைக் கிராமசேவகரின் உதவியுடன் அடையாளங் கண்டு அழித்தொழிக்கின்றது இராணுவ இயந்திரம். பார ஊர்திகளில் இறந்தவர்களின் உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் போது மனிதம் இன்னமும் வாழுகிறதா என்று கேள்வி எழுப்பத்தோன்றுகிறது.

ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் றுவாண்டா இராணுவத்தளபதியைத் தொடர்பு கொண்டு இனப்படுகொலை பற்றிக் கேள்வி எழுப்பிய போது "போராளிகள் எங்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்." என்று படுகொலைகளை மூடிமறைப்பது, இலங்கையில் "பயங்கரவாதிகளைக் கொல்கிறோம்" என்று கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் போக்குக்கு ஒப்பானதாக உள்ளது.

றுவாண்டா நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களை ஐ.நா. படைகள் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது தங்களையும் அந்த வண்டிகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றுமாறு றுற்சி இன மாணவர்கள் கதறுகிறார்கள். சிலர் அந்த வண்டிகளில் பாய்ந்து ஏறி அடைக்கலம் தேடமுயல்கிறார்கள். ஐ.நா. படைகள் வான் நோக்கித் துப்பாக்கி சூடு நடாத்தி அந்த மாணவர்களை வண்டிகளை நெருங்க விடாமல் அச்சுறுத்துகிறார்கள். வெள்ளை இன மாணவர்கள் தப்பினால் போதும் என்ற ஐ.நா.வின் தன்னலப்போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் கண் முன்னால் றுற்சி இனமக்கள் கொல்லப்படும் போது அவர்கள் அமைதியாகக் கண்டும் காணமல் போவது வேதனையைத் தருகிறது. எதிரியின் துப்பாக்கியை விட நண்பர்களின் மௌனமே தங்களை வாட்டியது என்று கதையாசிரியர் சொல்வது கண்கூடு.

பிரெஞ்சுப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் வந்து றுற்சி இனத்தவரைத் தேடியலையும் இராணுவத்திடம் நாங்கள் எல்லோருமே ஒரே மக்கள் என்று துணிச்சலாகக் கூறும் மாணவி துப்பாக்கி முனையால் தாக்கப்படுகிறாள். "இந்தக் பெண்களை உன் குழந்தைகளாக நினைத்துக் கொள். அவர்களை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சும் ஆசிரியை இராணுவத்தால் தாக்கப்படுகிறாள். "என் மகள் கரப்பான்பூச்சி அல்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அத்தனை மாணவிகளையும் இனவேறுபாடின்றிச் சுட்டுத்தள்ளுகிறது இராணுவம்.

திரைப்படம் முடிந்த பின்னரும் நெஞ்சை விட்டு அகலாமல் அந்தக் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இறந்து போன ஒவ்வொரு உயிருக்குமான கண்ணீரைத் தேக்கி இதயம் கனப்பதை மறுக்க முடியவில்லை. எங்கோ ஓர் ஆபிரிக்க கண்டத்தில் நடந்தேறிய இந்த இனப்படுகொலைகளுக்காக ஓர் அமெரிக்கனோ ஆசியனோ கண்ணீர் வடிக்கின்றான் என்றால் அது அந்த திரைப்படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி எனலாம். இது போன்ற எத்தனையோ மனிதப் படுகொலைகள் ஈழமண்ணில் அரங்கேறியும் அது உலகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதற்கு ஈழத்திரைப்படத்துறையின் நலிந்த போக்கே காரணம். அண்மையில் தாயகத்திலிருந்து வெளிவந்த ஆணிவேர் திரைப்படம் ஈழத்தமிழரின் துயர் சொல்லும் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொல்வந்த கருத்து திரைப்படத்தில் முழுமையாக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அது சிறிய ஏமாற்றமே. ஈழத்தமிழர் தவிர்ந்த வேறு எந்த இனமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீச்சையுடையதாக அந்தத் திரைப்படம் அமையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டத்திற்கான வலுவான காரணியும் இனக்கலவரத்திற்கான பின்னணியும் ஆணிவேரில் மேலோட்டமாகவேனும் அலசப்பட்டிருக்கவில்லை. 1983இல் கொழும்பில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்த ஒரு திரைப்படமாவது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. சியாம் செல்வதுரை எழுதிய Funny Boy என்ற புத்தகத்தில் இனக்கலவரம் குறித்த நேரடி அனுபவம் ஆங்கில் மொழியில் பதியப்பட்டிருந்தது. ஆனால் புத்தகம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு.

ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் வன்னிப்பகுதியில் வாழும் ஒரு மருத்துவர் இறந்து போவதாகச் சொல்லப்படுவதும் இறுதிக்காட்சியில் அவர் உயிரோடு வருவதும் நம்பமுடியாத ஒன்று. அதுவரை அவர் எங்கிருந்தார் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாததும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாக இருப்பது கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்க்கவில்லை. பத்திரிகை நிருபராக வரும் மதுமிதா இராணுவக்கட்டுப்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்திற்குச் செல்வதும் அதன் பின்னர் யாழ்ப்பாண இடப்பெயர்வைக் காட்டுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. வன்னியில் தயாரிக்கப் பட்ட உயிர்பூ, செவ்வரத்தம்பூ போன்ற குறும்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட ஆணிவேர் ஏற்படுத்தவில்லை. காட்சியமைப்பும் காட்சிகளின் தரமும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருந்தும் திரைக்கதையின் வலு படத்தின் உயிரோட்டத்திற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

இந்தக் குறைகளை எல்லாம் களையப்பட்டு, Sometimes in April படத்தில் றுவாண்டா றுற்சி இனமக்களின் அவலம் சொல்லப்பட்டது போல ஈழத்தமிழர் துயர் சொல்லும் ஒரு திரைப்படமாவது வெளிவரவேண்டும். றுற்சி இனப்படுகொலைகள் நடந்தது சித்திரையில். ஈழத்தமிழர் படுகொலை நடந்தேறியது மேமாதத்தில். றுற்சி மக்களுக்கு Sometimes in April என்றால் ஈழத்தமிழருக்கு Sometimes in May. எங்களுக்கான ஒரு திரைப்படம் உலகளவில் வெளிவருமா?