ஊர் வரும் பாதை தெரியாமல் - உங்கள்
உறவினில் ஒன்று வாடுதம்மா
போர் முரசம் உங்கு கேட்கையில் - இந்த
பாவையின் மனம் தடுமாறுதம்மா (தாயகமே..)
ஆற்றங்கரையின் ஓரத்தில்- ஊஞ்சல்
ஆடி வளர்ந்த ஆலமரம்
மாமன் வீட்டுத் தோட்டத்தில் - அஞ்சி
மறைந்திருக்கும் அணிற்பிள்ளை
அத்தனையையும் இழந்து விட்டோம்-இந்த
அவசர வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டோம்.
தாலாட்டை மறந்து விட்டோம் - ஈழத்
தாய் மடிவாசம் இழந்துட்டோம்
விழிகளில் ஈரம் துடைத்து விட்டு- ஈழ
விடியலுக்காக காத்திருப்போம் (தாயகமே...)
அன்னை மண்ணின் அரவணைப்பில் - அன்பில்
ஆடிமகிழ்ந்த காலம் அது
தென்னம் ஓலைக் கூரையில் -அன்பைத்
தேக்கிவைத்த குடிசை அது.
அத்தனையையும் இழைந்து விட்டோம் - இந்த
அந்நிய வாழ்வுக்குள் இணைந்து விட்டோம்.
தோட்டம் துரவுகளை இழந்து விட்டோம்- எங்கள்
தோழமை உணர்வைத் தொலைத்து விட்டோம்
மனதினில் பாரம் சுமந்து கொண்டு- எங்கள்
மண் விடுதலைக்காக காத்திருப்போம்.
(தாயகமே..)
செந்தமிழீழத் தமிழ்ப் பிள்ளை - இங்கு
சொந்த மொழி பேச மறுக்கின்றாள்
வந்த பாதையின் சுவடு மறந்து - சொகுசாய்
வாழும் தமிழ் மகனும் இருக்கின்றான்.
காலநதி நீரின் ஓட்டத்தில் - எங்கள்
கன்னித் தமிழ் இங்கு செத்திடுமோ?
ஞாலம் நிலைக்கின்ற காலம் வரை -அது
ஞாயிறு போல நிலைத்திடுமோ.
சொந்த மண் தாண்டி வந்து விட்டோம் - என்று
சொந்த மொழி பேச மறப்போமோ?
புலம்பெயர் மண்ணின் புதுமொழியில்
புலம்பிப் பண்பாடு மறப்போமோ?
(தாயகமே...)
Thursday, November 30, 2006
Saturday, November 25, 2006
மெல்லத்தமிழ் இனிச் சாகுமா?
நிலைக்குமா தமிழ் இந்நாட்டில்..?
மெல்லத்தமிழ் இனிச் சாகும் - எனச்
சொல்லி வைத்த எம் பாரதியே- கனடாவில்
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
ஆரியரும் பின் வந்த அந்நியரும்
அடிமைப்படுத்த முடியாத எம் மொழியை- கனடா
காளையரும் கன்னியரும்
கழுத்தறுக்கும் நிலை பாரம்மா..
நுனி நாக்கு ஆங்கிலமும்- வாயில்
நுழையாத பிரெஞ்சும்- இங்கு
தனியாட்சி நடாத்துதம்மா- நம்
தமிழ் இங்கு சாகுதம்மா
மெல்லத்தமிழ் இனிச்சாகும்.......
பாரதியும் பின்வந்த பாரதிதாசனும்
கம்பனும் கண்ணதாசனும்
பாடிய எம் தமிழ்- இன்று
வீடிழந்து போகலாமா?
ஆயிரம் அறிவுமதிகளும்
அண்ணன் காசியானந்தனும்
போற்றும் எம் தாய்மொழி- இங்கு
போக்கற்றுப் போகலாமா?
புரட்சிக் கவி புதுவையும்
புலித்தலைவன் பிரபாவும்
சொத்தெனப் போற்றும் என் தாய்மொழி- இன்று
செத்து விழலாமா?
ஓ! தமிழ்க் குடிமகனே - இங்கு
தமிழ் நிலையைப் பாரடா - உன்
தனித் தமிழ் முயற்சியால்- இத்
தலைவிதியை மாற்றடா
ஆக்கமிகு வேலைத்திட்டம்
ஆயிரம் நீ தீட்டடா
பூக்கும் தனித்தமிழீழத்தில்- அதன்
புகழை நிலை நாட்டடா
பாட்டுக்கொரு தலைவன்
பாரதி போல் வாழடா- நீ
போற்றும் பெண் தமிழைப்
பொன் போல பாரடா
வாட்டமுறும் போது- திரு
வள்ளுவனைப் பாரடா- வாழ்க்கையில்
ஓட்டம் பல கண்டாலும்- தமிழில்
நாட்டம் நீ காட்டடா
Subscribe to:
Posts (Atom)
