Sunday, August 20, 2006

பணம் கொடுத்து பண்பாட்டை விற்கும் தமிழ்க் கனடியர்.

கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மத்தியில் அண்மைக் காலமாகப் புதுவிதமான ஒரு பண்பாடு துரித கதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. திருமண சடங்குகளில் slide show எனப்படும் ஒளிப்படத்தொகுப்பு திருமணங்களுக்கு வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டப் படுகிறது. இந்த ஒளிப்படத் தொகுப்புகளில் இவர்கள் மணமகனையும் மணமகளையும் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் மற்றும் Scarborough Centre போன்ற பொது இடங்களிலும் ஓடவிட்டும் ஆடவிட்டும் ஒளிப்படங்களாக்குகின்றார்கள். திரைப்படங்களில் வரும் பாடற்காட்சிகளில் வரும் நடிகனும் நடிகையும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு தழுவிக்கொள்வது போல் மணமகனையும் மணமகளையும் செய்யுமாறு சொல்லி அதை ஒளிபடமாக்கி அதனைத் திருமண வீடுகளில் திரையிடுகிறார்கள். இதில் வரும் மணமகனும் மணமகளும் வேறு வேறு இடங்களில் மேற்கத்து மற்றும் பண்பாட்டு உடைகளில் வருகிறார்கள். திருமணத்திற்கு வரும் உறவினருக்கு இதனைக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் மணமக்களை திருமணத்திற்கு முன்னரே இது போல் கட்டியணைத்து முத்தமிட்டு திருமணத்திற்குப் பின் நான்கு சுவற்றுக்குள் நடக்கவேண்டியவற்றையெல்லாம் படம் பிடித்து திரையிட்டுக் காட்டுகிறார்கள். இவ்வாறான ஒளிப்படங்களைப் பிடிப்பதற்கு இவர்கள் கொடுக்கும் விலை கனடியப் பணமதிப்பில் $ 3,000.
ஒளிப்படம் பிடிப்பவர்களின் வியாபார நோக்கத்திற்குப் பலியாவது கனடா வாழ் இளைய தலைமுறையினர். கனடியப் பண்பாட்டி ஊறி வளரும் அவர்களுக்கு இது போல் மற்றவர் முன்னர் அணைப்பதோ முத்தமிடுவதோ பெரியவிடயம் அல்ல. இது அவர்களுக்கு மிகச் சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால் அந்த மணமக்களுடைய பெற்றோர் இதை வரவேற்பதும் ஆதரிப்பதும் சற்று வியப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. இந்தப் பெற்றோருடைய காலத்தில் இவர்கள் எடுக்கும் திருமணப்படங்களில் இவர்கள் தத்தமது வாழ்க்கைத்துணைக்கு நெருக்கமாக நின்றிருக்கமாட்டார்கள். மணமகளை அந்த ஆண் எந்தப்புகைப்படத்திலும் தொட்டபடி நிற்கமாட்டான். ஆனால் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் ஒருவர் தோள் மீது ஒருவர் கைவைத்தும் ஒருவர் கையை மற்றவர் பற்றியவாறும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருந்தபோதும் மணமக்களுக்கு இது போன்ற படங்களை எடுக்கும் போது ஒருவிதமான தயக்கமும் கூச்சமும் இருக்கும்.
இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவென்றால் இது போன்ற ஒளிப்படங்களை எடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கனடாவில் பிறந்தவர்கள் அல்லர். இவர்கள் 10 முதல் 12 வயதிற்குள் கனடாவிற்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழ்த் திரைப்படங்களின் மீதிருக்கும் அதீத மோகமும் பாடற்காட்சிகளின் மீது இருக்கும் அளப்பரிய கவர்ச்சியுமே இவர்களை இது போன்ற புகைப்படங்களை எடுக்கத்தூண்டுகின்றன. தமிழர் பண்பாடும், ஆண்- பெண் உறவை வெளிச்சமிட்டுக் காட்டக்கூடாது என்ற எண்ணமும் இவர்களுக்கு இருப்பதில்லை.
திருமணத்திற்கு முன்னர் மணமக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதோ நெருங்கிப் பழகுவதோ காதலிக்கும் போது நெருக்கமாக இருப்பதோ பண்பாட்டின் படி தவறாகும். ஆணும் பெண்ணும் கருத்தொருமித்துப் பழகுவதும் மனதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதும் தவறல்ல. ஆனால் திருமணம் என்றொரு பாலம் இருவரிடையேயும் ஏற்பட்டு சட்டப்படியும் உறவினர் முன்னிலையிலும் கணவன் மனைவி என்ற அங்கீகாரம் கிடைக்கும் வரை தொடுதலை தவிர்க்கலாம். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆண் பெண் உறவு திருமணத்திற்கு முன்னர் இருப்பது மிகச் சாதாரண விடயம் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும், உறவினர் முன்னிலையிலும் திருமணத்திற்கு வரும் தமிழரல்லாத வேற்றினமக்கள் மத்தியிலும் இது போன்ற கேவலமான ஒளிப்படத் தொகுப்புகளைப் போட்டு தமிழர் பண்பாடு இது தான் என்ற எண்ணத்தை வளரும் தமிழ் சமூகத்தின் மத்தியிலும் மற்றைய இனத்தவரிடமும் விதைக்காதீர்கள். பணத்தைச் செலவு செய்து பண்பாட்டை விற்காதீர்கள்.

Wednesday, August 09, 2006

மண் வாசனை

வெளியே நிலாக்காய்ந்து கொண்டிருந்தது. முற்றத்துத் தென்னை மரக்கீற்றிடைவெளிகளில் நிலவொளி புகுந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் பாய்விரித்துப் படுத்திருந்த கனகம் மெல்லப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மெல்லிய கூதலோடு கூடிய தென்றல் அவள் உடலை வருடிக் கொண்டிருந்தாலும் உள்ளே மனம் கொதித்துக் கொண்டிருப்பது அவளின் அனல் போன்ற பெருமூச்சில் புலப்பட்டது. " வன்னிக்கு மாடு சாய்க்கவென்று போன மனுசன். போய் இன்றோடு இரண்டு கிழமையாகப் போகுது. அப்படி என்னதான் செய்யுதோ தெரியவில்லை. வீட்டில் மனிசி பிள்ளையள் தனிய இருக்குங்கள் எண்ட நினைப்பிருந்தால் இப்பிடி இருப்பரே ". உள்ளே மகள் கண்மணி விழித்தெழுந்து சிணுங்கிக் கொண்டிருப்பது தெரிந்து திடீரென்று விழித்துக் கொண்டாள். " கனகம், மோள் எழும்பி அழுகிறாள் போல இருக்குப் பிள்ளை. ஒருக்கா வந்து பாரன் " திண்ணையில் படுத்திருந்த மாமியார் குரல் கொடுத்தார். மெல்லிய தூங்கக் கலக்கத்தோடும் எரிச்சலோடும் வாயிற்கதவை திறந்து உள்ளே போய் பார்த்தாள். நிலைப்படிக்கருகில் இருந்த தூணில் தொங்கிக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கை மெல்லத் தூண்டி விட்டு வீட்டிற்குள் ஒளிபாய்ச்சினாள். கூடத்து மண் தரையில் மகள் கண்மணி சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. "என்ன பிள்ளை, ஏன் சுருண்டு படுத்திருக்கிறாய்? என்ன மோனை செய்யுது?" "அம்மா, என்னண்டு தெரியல்லையணை. காத்தால இருந்து ஒரே வயிற்றுக் குத்து. இப்ப கொஞ்சம் கடுமையா இருக்கு. குத்து தாங்கமுடியாமல் இருக்கணை. ஏதாவது மருந்து, கிருந்து இருந்தால் தாணை" " கொஞ்சம் பொறு பிள்ளை. கசாயம் வைச்சுத் தாறன். காத்தால விடிஞ்சதும் பரியாரி வீட்டுக்குப் போய் மருந்தெடுப்பம்." அடுக்களையில் நுழைந்து முந்தநாள் பெய்தமழையில் நனைந்து ஊறிப் போயிருந்த விறகை தணலில் கொஞ்ச போட்டுவைத்தாள். அடுக்களைத் தட்டிலிருந்த தகரப்பேணிகளில் சுக்கைத் தேடிக் கண்டுபிடித்து கொத்தமல்லி போட்டுக் காசாயம் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு. இந்த நேரத்தில் ஒத்தாசைக்குப் பக்கத்தில் இல்லாமல் வன்னிக்கு மாடு சாய்க்கப் போன மனுசன் கந்தப்பு மீது கோபம் கோபமாக வந்தது. " ஊரில் யாருக்கு மாடு வேணுமென்றாலும் இந்தா நான் போய் வாங்கி வாறன் என்று போகவேண்டியது. இங்க குடும்பம் குட்டியள் தனிய இருக்குங்கள் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கவேண்டியது. இந்த இராத்திரி நேரத்தில் பிள்ளை ஏலாமல் படுத்திருக்கிறாள். திடீரென்று உடம்பிற்கு முடியாமல் போய் பரியாரி வீட்டுக்குப் போவதென்றால் இவளால் வண்டி கட்டிக் கொண்டு போகமுடியுமோ இந்த நேரத்தில. மனிசி, பிள்ளையளின்ர நினைப்பு கொஞ்சமாவது இருந்தால் இப்படி போய் கிழமைக்கணக்கில வராமல் இருக்குமெ இந்த ஆள்." கோபத்தோடு முணுமுணுத்தபடி கயிற்றுக் கட்டிலில் வந்து படுத்தவள் எப்படியோ தூங்கிப் போனாள். வீதியில் மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுத்திடுக்கிட்டு எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. தோட்டத்தில் வேலை தேங்கிப் போய்க் கிடக்கு. வெயிலேற முந்தி மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். அப்படியே வெங்காயப்பூ முறிக்கவேண்டும். அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளைப் பிடுங்கி எறியவேண்டும். இப்ப விட்டால் பிறகு வெறும் புதர்க்காடு தான் மிஞ்சும். கடைசியில் வெங்காயத்தைத் தேடித்தான் பிடிக்கவேணும். அவசர அவசரமாக எழுந்து கிணற்றடியில் போய் முகத்தை அலம்பி கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கொண்டை போட்டாள். உள்ளே வந்து தேநீர் போடுவதற்காக அடுப்பை ஊதி மூட்டிவிட்டு கூடத்திலிருந்த தூண்டாமணி விளக்கைக் கொஞ்சம் தூண்டி விட்டாள். திண்ணையில் படுத்திருந்த மாமனார் சத்தம் கேட்டு விழித்து, " என்ன பிள்ளை விடிஞ்சிட்டுதெ? " குரல் கொடுத்தாள். " ஓம் மாமா. தோட்டத்தில கனவேலை கிடக்கு இன்றைக்கு. மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். துலா மிதிக்க ஆள் இல்லை. நீங்கள் தான் வரவேணும்.மகனைத் தண்ணி மாறவிடலாம். பள்ளிக்கூடம் தொடங்கிறதுக்கு முந்தி முழுக்க இறைச்சு முடிச்சமென்றால் தம்பி பள்ளிக்கூடம் போகலாம். பிள்ளை வயிற்றுக்குத்து என்று ஏலாமல் படுத்திருக்கிறாள். அவளைப் பரியாரி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். இறைச்சுப் போட்டு வந்து வெளிக்கிடுவம். "என்றாள்.

Tuesday, August 01, 2006

அந்திவானும் ஆழ்கடலும்
அணைத்துக் கொள்ளும்
இளமாலைப் பொழுதில் நீங்கள்
தீட்டிய கவிதைகள்
கானல் நீரில் கை நனைக்கும்
கனவுகள் அல்ல.
தூரத்து வானைத்
தொட்டுவிடத் துடிக்கும்
துடிப்புள்ள இளைஞரின்
கை சேர்ந்த கவிதைகள்.
இது கவிச்சாரல்
கலங்கரை தேடும் இளம்
கவிஞர்களுக்கெல்லாம்
களம் அமைத்துக் கொடுக்கும்
தளம் இது.