Monday, December 18, 2006

கடற்கோள் காவு கொண்ட என் பள்ளித்தோழியின் நினைவலைகள்.

நாட்குறிப்பேடு தை 16 2005

என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையின் நிலையாமை குறித்துப் பலர் பலவிதமாகப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதை இந்த இளம்வயதில் உணர்ந்து கொள்ளக் கூடிய நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் நடந்து வந்த பாதையினைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.எத்தனையோ முள் தடங்கள் எல்லாம் தாண்டி இப்போது வசந்தத்தின் வாசலில் இருப்பதாக நான் நினைத்ததில்லை. முள்ளின் நடுவே மலர்ந்திருக்கும் மலரைப் பார்த்து முட்களை மறந்து போயிருக்கிறேன்.சின்ன சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்க்கையில் சினங்களை மறந்திருக்கிறேன். 1996 ம் ஆண்டு. யாழிலிருந்து இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட அகதியாய் நான் அந்த உடப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்த நேரம். பள்ளியில சேர்ந்த முதல்நாள் நீ பழக்கமானாய். காரணம்; யாழ்ப்பாணத்தமிழ் பேசத் தெரிந்த ஒருத்தி அங்கு நீயே தான். இடைவேளையின் போது வகுப்பே கூடியிருந்து ஒன்றாகச் சாப்பிடும். ஓவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். என்னால் மட்டும் முடியவில்லை. அவர்கள் தரும் உணவை உண்ணக்கூடாது.வீட்டில் போடப் பட்ட சட்டம். .நான் மட்டும் தனித்தீவாய் ஒரு மாதம் ஓடியது. வகுப்புத் தொழிகளுடனேயே பேசக் கூச்சமாக இருக்கும்.காரணம் நான் பேசும் தமிழ்.அந்நியப் பட்ட ஒரு சூழலில் எனக்கு அணைவாக இருந்தவள் அவள் ஒருத்தி தான். எத்தனையோ நினைவுகள்.இப்போது மீட்டிப் பார்க்கக் கண்கள் குழமாகின்றன. எங்கள் வகுப்பு ஓரத்தில் வெட்டையாய் இருந்த அந்த நிலப்பகுதியில் பூஞ்செடி வைப்போம் என்று முன் மொழிந்தேன்.மறுப்பின்றி நீ வழி மொழிந்தாய்.மறுநாளே ஆளுக்காள் ரோசா,செவ்வந்தி,செவ்வரத்தை,கனகாம்பரம்,நித்தியகல்யாணி என்று கொண்டுவர அந்த இடமே பூஞ்சோலையானது. இத்தனையையும் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஆண் மாணவர் கூட்டம் அன்றிரவே நட்டுவைத்த அத்தனை செடிகளையும் பிடுங்கி எறிந்து விட்டு எதோ பெண்களையே உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டனர்.மறுநாள் காலை பள்ளி வந்து நீ இவற்றை எல்லாம் பார்த்து அழுதது இன்னும் என் கண்களில் நிற்கிறது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று ஆத்திரப் பட்ட நாம் அதிபரிடம் புகார் செய்ததும் மறுநாள் அந்த மாணவர்களே மலர்த்தோட்டம் அமைத்தது கண்டு நீ கேலி பேசிச் சிரித்ததும் இப்போது போல் இருக்கிறது. சில நாட்கள் ஓடிய பின் காலையில் பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் நட்ட ரோசா பூப்பூத்திருந்தது. என்னையறியாமலே, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற பாடலைப் பாடியவண்ணம் தண்ணீரை ஊற்றிப் பாத்தி கட்டிக் கொண்டிருந்த நான் ஆளரவம் கேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்க்க பின்னால் சிறீகாந்தா ஆசிரியர் நமுட்டுச் சிரிப்புடன், “ அம்மணி ரோசாப்பூவை விடப் பாட்டு நல்லா இருக்கு. நீ பாடிப் பாடி தண்ணீர் ஊற்று” என்று கேலியாகச் சொல்லி விட்டு நகர்ந்தார். எனக்கு வெட்கமாகிப் போய் விட்டது. “ அடி! வகுப்பில யாருக்கும் சொல்லாத. சொன்னால் கிண்டல் பண்ணுவாளுக” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே நீ வகுப்பு முழுவதற்கும் பறையடித்து விட்டாய். அன்று முழுவதும் உன்னைத் துரத்திக் கொண்டு நான் வர என்னிடமிருந்து தப்பி நீ ஓடியதும், அதன் பின் என்னைக் காணும் பொழுதெல்லாம், ரோசாப்பூ பாடல் பாடிப் பாடித் தோழிகள் வரவேற்பதும் இப்போது நினைக்கும் போது நேற்றுப் போல் இருக்கிறது..ஓவ்வொரு வெள்ளியும் காலையில் சைவமாணவர்களுக்கு சிவபுராணம் ஓதுதல் நடக்கும். உனக்கு அந்த தொல்லையில்லை. வானத்திலிருந்து வையகம் எழுந்த புனித ஆவியே பாடலுடன் இரண்டு செபங்கள் அவ்வளவு தான்.ஆனால் ஏனோ தெரியவில்லை.நீயும் சிவபுராணம் படிக்க வருவாய் எங்களுடன். தொல்லையிலும் பிறவி என்று பாடத்தொடங்கும் போதே எனக்கு சேக்கிழார் மீது எரிச்சல் வரும். ஆனாலும் அவை மகிழ்ச்சியான நாட்கள். நவராத்திரிக் காலத்திலும் காலையில் எழுந்து மாலைகட்டி(மாலை கட்டுவதில் கூட எமக்குள் எத்தனை போட்டி)பனிக்குளிரில் தலைகுளித்து,அப்பப்பா இப்போது நினைத்தாலும் நாடி நாளமெல்லாம் சில்லென்று விறைத்துப் போய் விடுகின்றது. அதை விட நகைச்சுவை தாவணி போடுவது. ஆளாளுக்கு ஒவ்வொரு நிறத்திலே தாவணி அணிந்து கொண்டு ஏதோ அழகிப் போட்டிக்குப் போவது போல் அணிவகுத்து நிற்போம். அதில் கூட நகைச்சுவையாக சொல்வார்கள் ஆசிரியர்கள், “குட்டிகள் எல்லாம் தாவணி போட்டால்தான் வெட்கப்படுதுகள.இல்லையென்றால் இதுகள் எல்லாம் பிசாசுக்கூட்டம்”; என்று. ஏனோ தெரியவில்லை. பெண்களைக் குட்டிகள் என்று சொல்லும் போது எனக்கு எரிச்சலாய் வரும். “குட்டிகள் என்றால் நாங்கள் என்ன நாய்க்குட்டிகளா? இல்லை ஆட்டுக்குட்டிகளா?பெண்கள் என்று சொல்லுங்கோ சேர்” என்று நான் சொல்வேன். நீ மட்டும் அதற்கும் நகைச்சுவையாகஇ “குட்டிகளுக்கு வெட்கப்படத் தெரியாதே சேர்.அதுகளுக்கெல்லாம் ஐந்தறிவு தான்.குமரிகள் வேணுமானால் வெட்கப்படுவாங்க.நாங்கள் குழந்தைகள்.நாங்கள் எப்படி வெட்கப் படுவது” என்று ஆசிரியருக்கு கிண்டல் அடிக்க “ இவளோட பேசி வெல்லமுடியாது”என்று தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்கள் போவதுகண்டு சிரிப்பாக இருக்கும்.
;நவராத்திரிகாலத்தில் கொலுவுக்கு முன்னால் தேங்காய்ப் பூவினாலும் மாவினாலும் கோலம் போட்டு அழகு படுத்துவோம். இத்தனை செய்தும் அந்த ஆண்மாணவர்கள் எங்களை கடவுளுக்கு மாலை போட விடமாட்டார்கள். “பெண்கள் கட்டிய பூமாலை வேண்டும் ஆனால் பெண்கள் போடக்கூடாது” என்று ஒருத்தி தொடங்க, “அதானே உங்கள் கழுத்திலா போடக் கேட்டோம்.கடவுளுக்குத் தானே போடக் கேட்டோம்” என்று கடிக்க, அத்தனை பெண்களும் கொல்லென்று சிரிக்க பையன்கள் பார்த்து முறைக்க, “ஏண்டா கந்தப்பு முறைக்கிறாய்?” என்று பின்னால் மறைந்திருந்து ஒருத்தி சொல்ல “எவடி அவள் துணிச்சல் இருந்தால் முன்னால் வந்து சொல்” கந்தப்பு தன் வீரத்தைப் பெண்களுக்கு முன் காட்டுவான். “குரைக்கிற நாய் கடிக்காது தானே.” என்று முணுமுணுக்க மீண்டும் ஆண்மாணவர்களுக்கும் பெண்மாணவர்களுக்குமிடையில் அதிகாரப் போட்டி தொடங்கும். ஆனாலும் இத்தனை குறும்புகளுக்கும் கேலிப்பேச்சுகளுக்கும் யாரும் ஆத்திரப் பட்டதோ கோபப்பட்டதோ இல்லை.இத்தனை கேலிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது நீ என்று ஆண்மாணவர்களுக்குத் தெரியும். அதனால் தான் “டயனா” என்கின்ற உன் பெயரை வைத்து எல்லோரும் “இளவரசி வராடா” என்று கிண்டல் செய்வார்கள்.எங்கள் பள்ளிக்காலத்தைக் கலகலப்பாக்கியவள் நீ என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஓருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்பும் வழியிலுள்ள பொதுக்கிணற்றில் பைத்தியக்கார கிழவி அம்மணமாய் குளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிழவிக்கு பைத்தியம் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அதைப் பார்த்துக் கொல் என்று சிரித்து விட்டேன். கிழவிக்கு வந்ததே கோபம், “ எந்த சிறுக்கி அவள் என்னைப் பார்த்துச் சிரித்தவள். பொட்டைக்கழுதை! குமரிப்பெண்ணா லட்சணமா இல்லாம கெக்கெக்கே சிரிக்கிறாளுகளாம் சிரிப்பு” என்று ஆத்தா தமிழ் அகராதியிலேயே இல்லாத கெட்ட கெட்ட சொற்களால் திட்ட ஆரம்பித்தது.நான் பயத்தில் விறைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் இவள் சும்மா இருக்கவில்லை. “ஏன் ஆத்தாக் கிழவி! நீ குமரிப் பொண்ணா லட்சணமா குளிக்கக் கூடாதா? நீ என்ன சிம்ரானா?” என்று ஏகத்துக்கு எகிற, “ஐயோ, எதுவும் சொல்லாதடி.பேசாம இருடி” நான் இவளை அடக்கமுயல இவள் பேச்சை நிறுத்தி விட்டு ஆத்தாவுக்கு நெளிப்புக் காட்டினாள். ஆத்தாவுக்கு வெறியே வந்து விட்டது.கல் எடுத்துக் கொண்டு எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது. நாங்கள் நாய் படாத பாடு பட்டு ஓட்டம் பிடித்தோம். வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே நுழையும் வரை என்னால் பதட்டத்தைத் தணிக்க முடியவில்லை.இன்றும் கூட அதை நினைத்து நான் சிரிப்பதுண்டு.
இப்படியெல்லாம் எங்கள் பள்ளிக்காலத்தை வசந்தமாக்கிய நீ இன்று வாய் மூடி எங்களை விட்டுப் போனதென்ன? உனது கடவுள் போதாதென்று எனது கடவுளையும் கும்பிட்டாயே. இருவரில் ஒருவர் கூடவா உன்னைக் காக்க முன் வரவில்லை?.எங்கள் கோவில் திருவிழாவுக்கு நானே போவதில்லை.ஆனால் பட்டை அடித்துக் கொண்டு நீ கிளம்பி விடுவாய்.இன்றும் கூட என்னால் நம்பமுடியவில்லை.உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நீ இருந்து கொண்டுதான் இருக்கிறாய் என்றே நம்புகிறேன். இன்று காலை தொலைபேசியில் வந்த அந்தச் செய்தி பொய்யாகியிருக்கக் கூடாதா? என ஏங்குகிறேன். இத்தனை நாளாய் உடப்பில் இருந்த நீ எதற்காக முல்லைத்தீவுக்குப் போனாய்? உன்னுடன் உன் அம்மா அக்கா சாந்தமலர் அத்தனையும் போய் விட அந்த அதிர்ச்சி தாங்கமுடியாமல் உன் அப்பா மாரடைப்பால் உயிர்விட்டாரே அது உனக்குத் தெரியுமா? தப்பிப் பிழைத்த உன் தம்பிக்கு நீ தருவது இந்தத் துயரத்தைத் தானா? எனக்கு மட்டும் கால ஓட்டத்தை பின்னோக்கிச் செல்லச் செய்யும் வலு இருந்தால் இத்தனை இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே. ஓன்று மட்டும் புரிகிறது. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை.இதில் எதுவுமே நிலையற்றது.ஜென்மங்கள் மீதெனக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன் மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால் ஈழத்தில் தமிழனாய் பிறந்து விடாதே. அழுவதற்கும் அலைவதற்கும் அடிபட்டு அழிவதற்கும் அநாதைகளாய்ப் போவதற்கு அடிமையாய் அகதியாய் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கும் தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உறவுகளை வெட்டிச் சாய்ப்பதற்குமே பிறந்த ஈனர்கள் நாங்கள். இனியொருமுறை ஈழத்தமிழனாய்ப் பிறக்காதே.

No comments: