Sunday, December 17, 2006

கடற்கோள் நினைவு வணக்கம்.

2004ம் ஆண்டு மார்கழித்திங்கள் எம் ஈழமண்ணில் கடலன்னை நிகழ்த்திய கோரத் தாண்டவத்திற்கு இரையாகப் போன எம் மண்ணின் மைந்தர்களுக்காய் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி என் மனதில் அந்த நாள் விதைத்துப் போன மாறாத வடுவை வரிகளில் கொட்டியிருக்கிறேன்.

நீண்ட இரவுகளை எமக்களித்து
நீங்கி நீங்கள் போய் விட்டீர்கள்
மாண்டவர் மீண்டு வருவார் என்று
மனதிலே ஏக்கம் கொண்டு
காத்திருக்கிறோம் எம்
கண்மணிகளே!

துளிரும் பருவத்தில் துடைத்தெடுக்கப் பட்டது
உங்கள் வாழ்வு மட்டுமல்ல
எங்கள் வருங்காலமும் தான்
காத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக்
கடலோடு போனவரை
வழி மேல் விழிவைத்துப்
பார்த்திருக்கிறாள் எம் மண்ணின்
பருவ மங்கை
அடித்த அலைவழியே அவன் உடலம்
திரும்பியது தெரியாமல்

கந்தகக் காற்று வீசும் மண்ணிலே
செந்தளிர்க் கால் பதித்து நடந்த
எம் குஞ்சுகள்
செந்தணலாகியுன் சீற்றத்தில் போனபின்
நிந்தகம் செய்வமோ நினைக்க மறுப்பமோ
சொல்லு கடலம்மா
சோதனைகள் ஏனம்மா?

பள்ளிப் பருவத்தில்
துள்ளித் திரிந்த என் தோழி
முல்லைக் கடலினிலே
மூழ்கித்தான் போயினளே!
அழுது முடிக்க முடியவில்லை
அருகிருக்க வழியும் இல்லை
நாட்குறிப்புகளிலே
நாளும் அழுகின்றோம்

சுட்டெரிக்கும் வெயிலிலும்
சூரியக் கதிரிலும்
செத்துப் பிழைத்த
எம் குழந்தைகளை
கொத்தும் உன் கொலைக் கரத்தால்
குதறி நீ போட்டதென்ன?

பாரம்மா!
எம் மண்ணைப்
பாலைவனமாய்க் கிடக்கிறது.
கனவு சுமந்த எம் துளிர்களின்
கவிதைகள் எல்லாம்
கானலாய்ப் போனது

துளிர்களைப் பிடுங்கி நீ
துரோகம் இழைத்து விட்டாய்
ஊர் மனைகளில் நீ
ஓலவிதை விதைத்து விட்டாய்
ஊரோடித்திரிந்தவரை
ஊமையாய் ஆக்கிவிட்டாய்
அம்மி மிதித்த மங்கையரை
விம்மி அழவைத்து விட்டாய்.
புலம்பெயர் உறவுகளைப்
புலம்ப நீ வைத்து விட்டாய்

என்ன செய்வது?
மாண்ட உங்களுக்காய்
மௌனமாய் வேண்டிவிட்டு
மீண்டும் இயந்திரமாய்
வேலையும் வீடுமாய்
வாழும் நாமெல்லாம்
ஆங்கிலேய நாடுகளில் உங்களுக்காய்
அழுகின்ற அகதி உறவுகள்.


No comments: