உடப்பில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவழித்தமிழர்கள் என்றுகருதப்பட்டாலும் இவர்கள் மலையகத்தமிழர்களைப் போன்று அடிமைகளாகவோகூலிகளாகவோ நடத்தப்படவில்லை. 1970_1985 காலப் பகுதிகளில் உடப்பு பணவசதிகொண்ட ஊராகக் கருதப்பட்டது.இத்தனை வசதிகள் இருந்தபோதும் இவ்வூரவர்கள்கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்தவில்லை. பொதுவாக பெண்கள் அதிகமாகப்படித்திருக்கவில்லை.இன்றும் கூட அந்த ஊரிலிருந்து ஒரு மருத்துவரோபொறியிலாளரோ கணித விஞ்ஞானத்துறைகளில் இளமானிப் பட்டம் பெற்றவர்களோஉருவாகவில்லை. பெண்கள் மிதிவண்டி ஓடினால் அதை அதிசயமாகப் பார்க்கும்போக்கு இன்றும் அங்கு இருக்கின்றது.1990 வரை இந்த ஊரை மேலைத்தேய நாகரீகம்தாக்கவில்லை. பெண்கள் சேலை,பாவாடை, தாவணி அணிவதையே காணக்கூடியதாகஇருக்கும். அதன் பின் ஏற்பட்ட திடீர்மாற்றங்களால் கொழும்புப் பகுதியின் செல்வாக்கால் உடை விடயத்தில் மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் கோவில் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் தங்கள் பண்பாட்டு உடைகளை அணிவது இவர்கள் வழக்கம்.
இந்த ஊரில் வாழும் பெண்கள் அதிகம் படித்திருக்காதமையால் தனித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். கணவனையோ பெற்றோரையோ தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு .இவ்வூரில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகம். அதனால் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட ஆண்களை இங்கு காணக்கூடியதாய் இருக்கும். 1990 ல் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்பட்ட போரினால் இவர்கள் முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்யும் வாய்ப்பினை இழந்தனர். அதனால் வறுமை இவர்களைச் சூழ்ந்து கொண்டது.மீன்பிடி தவிர வேறு தொழில் தெரியாத இவர்களுக்கு சாராயம் காய்ச்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனால் பெண்களே சாராயம் காய்ச்சி விற்பது குடிசைக் கைத்தொழிலாகிப் போனது. இது போன்ற கள்ளச்சாராயத்தின் தீமை தெரியாமல் அதைக் குடித்து விட்டு இளம் வயதிலேயே ஈரல் கருகிச் சாவது இங்குள்ள ஆண்களின் தலைவிதி ஆனது.
இவர்கள் வேறு ஊரவர்களைத் திருமணம் செய்வதில்லை. பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்காக சீதனம் கேட்கும் வழக்கம் இந்த ஊரில் மிக அரிதான விடயம். மொத்தக்கிராமமே மீனவர்கள் என்பதால் சாதிபற்றி இவர்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியத் திரைப்படங்களில் தாக்கம் இந்த ஊரில் அதிகம் எனலாம். வீட்டில் ஒரு வேளை உணவிற்கு சிரமப்பட்டாலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும்.ஈழப் போராட்டம் பற்றிய அறிவு இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு இல்லை. நீர்கொழும்பு,முந்தல்,ஆனைவிழுந்தான்,புளிச்சான்குளம் போன்ற கிராம மக்கள் இலங்கைஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றகாலப்பகுதியில் இந்து மதத்திலிருந்து கிறீஸ்தவர்களாக மாறி பிற்காலத்தில் தமிழ் மறந்து சிங்களம் பேசுபவர்களாக மாறிய பின்னும் இவ்வூரவர்கள் இன்னும் தமிழ் பேசுவதற்குக் காரணம் அவர்களின் தீவிர மத நம்பிக்கை. பார்ப்பன ஐயர்மாரின் தாக்கம் சமீபகாலமாக இங்கு அதிகரித்துள்ளது எனலாம். இருந்தாலும் இங்குள்ள கோவிலில் மரபுவழியான வழிபாடே அதிகமாக நடைபெறுகிறது. சிலவேளைகளில் இவ்வகையான வழிபாடு வெறித்தனமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் எனக்கு தோன்றியது உண்டு. பெண்தெய்வமான காளிக்கு அதிகம் அச்சப் படுகிறார்கள்.ஆண்டின் குறித்த ஒருகாலப்பகுதியில் காளி தெய்வத்திற்கு ஆடு பலியாகக் கொடுக்கிறார்கள்.அப்படிகொடுக்காவிட்டால் ஊருக்கு தீமை உண்டாகும் என்ற அச்சம் இவர்களிடம் அதிகம் உண்டு. இது போல் தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளல், நெஞ்சைக்கத்தியால் (ஆண்கள்) கீறிக் கொள்ளல் போன்ற பயங்கரமான வழிபாடுகள் இங்குஅதிகம். இவையெல்லாம் முட்டாள் தனமான பிற்போக்கானநம்பிக்கை என்று சொன்னால் இவ்வூரைச் சேர்ந்த படித்த ஆசிரியர்களே தங்கள் தெய்வத்தை அவமதிப்பதாக எண்ணிக் கோபப் படுகிறார்கள்.
உடப்பு என்று இந்த ஊருக்கு பெயர் வரக்காரணம் என்று கேட்டால் இருவேறுவிதமான கதைகளைச் சொல்கிறார்கள்.ஒன்று இவர்கள் இந்த ஊருக்கு வந்த போது இவ்வூர் உடை முள் காடாக இருந்ததாம்.இரண்டு மாரிகாலங்களில் கடல் நீரேரியில் நீர் மட்டம்அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் வரும் போது இவர்கள் நீரேரிக்கும் இந்துமாகடலுக்கும் வாய்க்கால் வெட்டி அந்த நீரை கடலுக்குள்அனுப்புகிறார்கள். அப்போது நிலத்தை உடைத்து வாய்க்கால் கட்டுவதால்"உடைப்பு" என்ற சொல் கால ஓட்டத்தில் உடப்பாக மாறியிருக்கலாம்.
இவ்வூரில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. இரண்டிலுமே க.பொ.த உயர்தர(தரம்12_13)கணித விஞ்ஞானப் பிரிவுகள் இல்லை.சாதாரண தரத்தில் கற்பிக்க(தரம் 11)ஆங்கில விஞ்ஞான கணித ஆசிரியர்கள் அதிகம் இல்லை.இது குறித்து மாவட்டகல்வித்திணைக்களத்துடன் போராடி ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் அக்கறை இங்குள்ள இளைஞர்களுக்கு இல்லை. ஓரு சில படித்த இளைஞர்கள் இலவசவகுப்புக்களை நடாத்தி கல்வி தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தமுயல்கின்ற போதிலும் அது மக்களால் அதிகளவில வரவேற்கப்படவில்லை. தொடர்ந்தும் வடபகுதி யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து ஆசிரியர்களும் மருத்துவர்களும் அரசினால் இங்கு நியமனம் செய்யப் படுகின்ற போதிலும் அவர்கள் சிறிதளவு காலமே இங்கு தங்குகிறார்கள். காரணம்மருத்துவ நிபுணர் படிப்போ அல்லது முதுமானி முனைவர் படிப்போ படிப்பதற்கு இங்கு பல்கலைகழக வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் மிகக் குறைவு. சரியானசாலை பெருந்தெரு வசதி இவ்வூருக்கு இல்லை.
1980களிலிருந்து ஒரே ஒரு யாழைச் சேர்ந்த மருத்துவர் இவ்வூரிலேயே தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இங்குள்ள அதிக வசதிகளற்ற கிராமிய மருத்துவமனையில் இவர் தொடர்ந்து பணிபுரிவதால் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கூட மக்கள் அவரை விடுவதாக இல்லை."கைராசியான மருத்துவர்"என்று அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை மிக மிக அதிகம். தாங்கள் பிடிக்கும் மீனை இவருக்கு கொடுப்பதும் மருத்துவருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுப்பதும் வயதில் முதியவர்கள் கூட இவரை ஐயா என்றழைப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டில் பண்ணையார் நாட்டாமை போன்றவர்களுக்கு அடிமைகளாக நடப்பவர்களை போல் தோன்றும். இது போல் படித்த பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை மிகஅதிகமோ அல்லது அடிமைத்தனமோ என எண்ணத் தோன்றும்.
இவ்வூரவர்கள் வீட்டையும் முற்றத்தையும் மிகத் தூய்மையாக வைத்துக் கொண்ட போதும் வீதிகளில் காயவிடுகின்ற கருவாடும் மீன் கழிவுகளாலும் உண்டாகின்ற ஈபெருக்கத்தினால் அடிக்கடி வாந்திபேதி, வயிற்றோட்டம்,காய்ச்சல் போன்றன ஏற்படுகின்றன.இது குறித்து கிராமிய மருத்துவமனை விழிப்பாக இருப்பதாலும் மருந்து வசதிகள் தாராளமாய்க் கிடைப்பதாலும் பெரிதாக இறப்புக்கள் ஏற்படுவதில்லை. கிராமிய மருத்துவ மனையினால் முன்னெடுக்கப் பட்ட குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டம் இங்கு வெற்றியளித்திருக்கிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் இந்த தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களில் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.
இவ்வூரை அடிக்கடி தாக்கும் இன்னொரு ஆபத்து அம்மை,சின்னம்மை,கொப்புளிப்பான் போன்ற வைரசுநோய்கள். இதற்கு அவ்வூரின் காலநிலை மாற்றமும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதுமே காரணம் என மருத்துவர்கள் நம்பினாலும் இவ்வூரவர்கள் அதைச் சாமி குற்றமாகக் கொள்கிறார்கள். இந்நோய் ஏற்பட்டவர்கள் கோவில்களில்தங்கியிருந்து நோய் குணமடைந்த பின் அம்மனைக் குளிரவைக்க ஒருவகை கஞ்சியை அம்மனுக்கு படைத்து அதன் பின்னரே வீடு செல்கிறார்கள்.இது போலவே அம்மனை மனம் குளிர வைக்க பெண்கள் ஆண்டின் ஒருகாலப்பகுதியில்(எந்த திங்கள் என்று சரியாக நினைவில்இல்லை)முளைப்பா(வேறுபட்ட தானியங்களை ஒரு சாடியில் வளர்த்தல்) பதியம் போட்டு அவை வளர்ந்ததும் இறுதி நாளில் அதனைக் கடலில் போட்டுக்கரைப்பர்.அந்த இறுதி நாளில் இளம் பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து கடற்கரையில் கும்மி கொட்டுவர்.இதனை வேடிக்கை பார்க்க ஆண்கள் வருவார்கள்.இந்நிகழ்வினால் அம்மனின் மனம் குளிர்வடைந்து நல்ல கணவனை அந்தப் பெண்கள் பெற்றுக் கொள்வார்கள் என்று அவ்வூரவர்கள் காரணம் கூறினாலும் இது கூட ஒருவகைச் சுயம்வரமோ என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் இந்நிகழ்விலேயே அதிகமான ஆண்கள் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். பெண்களும்இந்நிகழ்வுக்கு செல்லும் போது வழக்கத்தை விட அதிகமாக நகையணிந்து பட்டு உடுத்தி ஒப்பனை செய்து கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது கூட ஒரு பெண் பார்க்கும் படலம் தான்.
இங்குள்ள பெண்களுக்கு நகைகள் மீதும் உடைகள் மீதும் அதிக ஆசை.திருவிழாக்காலங்களில் கடன் பட்டேனும் உடைகளும் நகைகளும் வாங்கிவிடுவார்கள். சேமிப்பு பழக்கம் இவர்களிடம் இல்லாத ஒன்று. பணம் கிடைக்கும்போது அளவுக்கு மீறி ஆடம்பரமாகச் செலவழிப்பதும் பணம் இல்லாத போது நகைகளைஅடைவுக்கு வைத்தோ விற்றோ பணம் எடுப்பதும் இவர்கள் வழக்கம். வங்கியில்பணத்தை வைப்புச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணலாம்.மாதத்தில் ஒரு தடவையேனும் திரையரங்குகளுக்கு குடும்பமாகச் சென்று படம் பார்ப்பது இவர்கள் வழக்கம். இதற்காக பலர் சிலாபம் நகரிற்கு பேரூந்தில் சென்று படம் பார்ப்பார்கள்.
இங்குள்ள அரசியல் தமிழகத்து அரசியலைப் போன்றது. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிற்கே ஆதரவு கொடுக்கிறார்கள்.இதனால் தொண்டர்களுக்கிடையே அடிதடி மோதல்களைத் தேர்தல் காலத்தில் காணக்கூடியதாய் இருக்கும்.இவ்வூரில் களவு கொலை போன்ற குற்றங்கள் நடப்பது இல்லை.ஆனால் தற்கொலை வீதம் இங்கு அதிகம் எனலாம். அதுவும் காதல் தோல்வியாலும் கணவன் மாமியார் கொடுமையினாலும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் அதிகம். ஆண்கள் குடித்து விட்டு மனைவியரை அடிப்பது பார்க்க கொடுமையாக இருக்கும். படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படியான வேறு பெண்ணை நாடிச்செல்லும் ஆண்களையும் கொடுமைப் படுத்தும் ஆண்களையும் சட்டத்தின்பிடியில் நிறுத்துவது இவர்களால் முடியாத செயல்.ஒரு சில பெண்கள் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு கணவரைக் கத்தியால் வெட்டியகொடுமைகளைக் கேள்விப் பட்டதுண்டு. இவர்களின் இந்த முடிவினால் பாதிக்கப்படப் போகும் பிள்ளைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.படிப்பறிவு இல்லாதமையால் உண்டான தன்னம்பிக்கையின்மையும்அவசரத்தில் எடுக்கும் முட்டாள் தனமான முடிவுகளுமே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இந்நிலை மாறவேண்டுமானால் ஒரே வழி பெண்கள் படிக்கவேண்டும். ஆனால் "பெட்டை கழுதைக்கு படிப்பு என்னாத்திற்கு?கல்யாணம் கட்டினமா பிள்ளை பெத்தமா என்று இல்லாமல்" என்று கிராமத்துக் கிழவிகளே சொல்லும் போது எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது? தாங்கள் பிறந்ததன்நோக்கமே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என்று எனது தலைமுறைப் பெண்களே நினைப்பது வேதனை.இவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே இந்த ஊருக்கு விடுதலை. இவர்களுக்கு இப்போது வேண்டியது இனவிடுதலைஅல்ல.சமூக விடுதலை.
Tuesday, December 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
தங்கள் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. கிராமத்தை அப்படியே ஒரு சமூகவியல் கண்னோட்டத்துடன் படம் பிடித்துள்ளீர்கள் நன்றி
நன்றி சூரியகுமார். அந்த ஊர் மக்களின் விருந்தோம்பலைப் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கொடுக்கும் வரவேற்பு மிக அபாரம். வீட்டுக்கு வருவோர் தெரிந்தவராயின் தெரியாதவராயினும் வாசலில் வைத்துப் பேசிவிட்டு அனுப்பும் பழக்கம் இவர்களுக்கு இல்லை.
கட்டுரையை முழு நேர்த்தியோடு தந்திருக்கீங்க.
//தாங்கள் பிறந்ததன்நோக்கமே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என்று எனது தலைமுறைப் பெண்களே நினைப்பது வேதனை//
:(:(:(
Post a Comment