நாடகம்: உண்ணாவிரதம்
கதை, வசனம், இயக்கம், நடிப்பு: கலைஞர் மு. கருணாநிதி
துணை நடிகர்கள்: ஸ்டாலின், அழகிரி, தங்கபாலு
காலம்: 2-4 நாட்கள்.
இடம்: சென்னை, அண்ணாசிலை
ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி கலைஞர் திடீர் காலவரையற்ற உண்ணாவிரத்தைத் தொடங்கியுள்ளார். ராஜபக்சே தமிழர்களைக் கொன்றது போல் என்னையும் கொல்லட்டும் என்று அவர் கூறியுள்ளார். அரசியல்வாதி என்பதைத் தாண்டி கலைஞர் மீதும் அவரின் தமிழ்ப் புலமை மீதும் தமிழினப் பற்றுமீதும் ஈழத்தமிழர்களுக்குத் தீராத காதல் உண்டு. கடந்த காலங்களில் அவர் பலதடவை சூழ்நிலைக் கைதியாக மாறி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த போதெல்லாம் ஈழத்தமிழர்கள் அவர் மீது வெறுப்புக் கொண்டதில்லை. பதிலாக, கருணாநிதியிடம் கருணை இருக்கிறது, பாவம் உதவுவதற்கு நிதிதான் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக கலைஞர் செய்யும் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு அவர் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழினத்தலைவர் என்று உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்ட அவர் தன் வயதிற்கு தரம் தாழ்ந்து நடத்தும் நாடகங்களும் கோமாளித்தனமான பேச்சுக்களும் கவிதைகளும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை. இந்த நாடகத்தின் உச்சக்கட்டமாக இன்று அவர் அரங்கேற்றியுள்ள உண்ணாவிரதக் கூத்து ஈழத்தமிழரின் பிணத்தின் மேல் அவர் அரங்கேற்றும் அரசியல் வியாபாரம். இந்த சூழ்நிலையில் கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நண்பர்களே ஒன்றைச் சிந்தியுங்கள். கலைஞரின் இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம் என்ன? உண்மையிலேயே அவர் ஈழத்தமிழர்களுக்காக மனம் வருந்துகின்றார் என்றால் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் பெண்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தை ஏன் அலட்சியம் செய்தார்? 6 பெண்களின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போன பொழுது அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தாரே எதற்காக? இத்தனை மாதங்களாக கண்முன்னே 16 மைல்கல் தொலைவில் ஈழத்தமிழர் மடியக்கண்டும் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென்று உண்ணாநிலை இருக்க என்ன காரணம்?
நேற்றைய தினம் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த அறிவித்தல் விடுத்தும் இலங்கை அரசு அதனைப் புறக்கணித்ததோடு மட்டுமன்றி, இலங்கை அரச தலைவரின் தம்பி கொத்தபாய ராஜபக்சே இன்னும் 2 நாட்களுக்குள் போரை முடித்துவிடுவோம் என்று பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். அத்தோடு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னும் 15 000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். மாறாக, அங்கு 165 000 பேர் வாழ்வதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கூறியுள்ளார். ஆனால் கொத்தபாய ராஜபக்சே லண்டன் பிபிசிக்கு தெரிவிக்கையில் அங்கு 15 000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறியுள்ளார். இந்த கூற்றுக்குப் பின்னால் இருக்கும் பயங்கரத்தை நாங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட, 150 000 மக்களை ஆதாரமின்றி கொல்வதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துவிட்டது. இன்றோ நாளையோ சத்தமின்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எங்கள் சொந்தங்கள் கொன்று குவிக்கப்படப் போகின்றார்கள். இலங்கை அரசின் இந்தச் சதித்திட்டம் உலகத்திற்குத் தெரிந்தும் அது பாரமுகமாக இருக்கின்றது. ஆனால் இந்த திட்டமிட்ட படுகொலைகள் உலகத்தின் கண்ணில் இருந்து மறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் கண்ணில் இருந்து மறைப்படமுடியாத ஒன்று. இனி வரும் தேர்தலில் இது எதிரொலிக்கப்படலாம் என்ற அச்சம் கலைஞருக்கு உண்டு. அதனால் தான் இதற்கு தான் பொறுப்பாளி அல்ல என்று காட்டுவதற்காகவும் தன் மீது அனுதாப அலை வீசவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடபநாடகத்தை கலைஞர் அரங்கேற்றியுள்ளார்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்வார்களே அது இது தான். இந்தப் பக்கம் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். அந்தப் பக்கம் நீங்கள் ஆயுதம் கொடுத்து ஆளுதவி கொடுத்து தமிழர்களைக் கொல்லுங்கள். கலைஞரின் ஆதரவின்றி மத்தியில் நடுவண் காங்கிரசு அரசு நீடிக்கமுடியாது. அப்படி இருக்கும் போது எதற்காக இவர் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? ராஜபக்சே என்னைக் கொல்லட்டும் என்கின்றாரே, ராஜபக்சே இவரை ஏன் கொல்லவேண்டும். கருணாநிதியை தமது நண்பர் என்கிறது சிங்கள அரசு. தமது நண்பரை எதற்காக அவர்கள் கொல்லவேண்டும். யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
புலம்பெயர் தேசத்திலே எங்கள் உறவுகளுக்காய் நாங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம். போரை நிறுத்துங்கள் என்று ஒவ்வொரு நாட்டுத்தூதரகத்திற்கு முன்னாலும் மண்டியிட்டு அழுகின்றோம். உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் சித்தப் பிரமை பிடித்தவர்களாய் எங்கள் இனம் மாறிக் கொண்டிருக்கின்றது. இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவிலும் உலகம் எங்களைக் கைவிடாது என்று மெல்லிய நம்பிக்கைக் கீற்றைப் பற்றிப்பிடித்தபடி தங்கள் உயிரைக்கூடத் துறக்கத்துணிந்து பிரித்தானியாவிலும் நோர்வேயிலும் கனடாவிலும் இளைஞர்கள் உண்ணாநோன்பிருந்து உலகத்தின் கவனத்தை எம்மீது திரும்பவைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றுக் கொள்கை கொண்ட நண்பர்களும் தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டு ஒரு குடையின் கீழ்திரண்டு அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர் தங்கள் சொந்தமண்ணின் சோகமறிந்து போராடும் போதும் கலைஞருக்கு ஏன் இந்தக் கபட நாடகம்? எங்கள் போராட்டத்தை முடிந்த வரை கொச்சைப்படுத்துவது தான் அவரின் குறிக்கோளா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்று சொல்வார்கள். ஐயா, கலைஞரே எங்களை விட்டு விடுங்கள். உங்கள் சொந்த மக்களை, மீனவர்களை இந்தியக் கடற்படையே தாக்கியிருக்கின்றதே இதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?
பொறுத்திருந்து பாருங்கள் இந்த கபடநாடகம் எப்படி அரங்கேறுகின்றது என்பதை. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றாரே என்று கலங்காதீர்கள். இது அவருக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவர் பலதடவைகள் எங்களுக்காக உயிர் விட்டுள்ளார்.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து உயிர்விட்டார். ஈழத்தமிழர்களுக்காக பலதடவைகள் உயிர் விட்டார். இப்போதும் கூட அப்படியே உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்ய முன்வந்துள்ளார்.இந்த நாடகம் 4 நாட்களுக்கு நீடிக்கும். நாளையே மத்தியிலிருந்து காங்கிரசின் சார்பில் பிரணாப் முகர்ஜியோ நாராயணனோ வருவார்கள். கலைஞரோடு பேசுவார்கள். மறுநாள் கலைஞர் ஊடகவியலாளர்களைச் சந்திப்பார். சந்தித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன என்று கூறி பழச்சாற்றைக் குடித்து உண்ணாவிரத்தை முடித்துக் கொள்வார். தமிழ்நாடே கலைஞரின் கதை வசனத்தில் உருவான இந்த நாடகத்தை வேடிக்கை பார்க்க, மறுபுறம் காங்கிரசு-ராஜபக்சே கூட்டணி வன்னியில் 150 000 மக்களைச் சத்தமில்லாமல் கொன்று குவித்திருக்கும். பார்வையாளர்களாய் கலைஞருக்குத் துதி பாடிக்கொண்டு புலம்பெயர் தேசத்தில் நாம் இருப்போம்.
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment